பாஜக ஆட்சியில் வன்முறை இல்லா உத்தரப் பிரதேசம் சாத்தியமாகியுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பாஜக ஆட்சிக் காலத்தில் வன்முறையில்லா உத்தரப் பிரதேசம் சாத்தியமாகியுள்ளதாக யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நேற்றுடன் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத், "உ.பியில் தற்போது அமைதி நிலவி வருகிறது. இதற்கு காரணம் பாஜகதான். பாஜக் ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் அமைதியை கொண்டுவர பாஜக கடுமையாக உழைத்திருக்கிறது. இது ஏதோ ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடவில்லை. இதற்காக நாங்கள் நீண்ட முயற்சியை மேற்கொண்டோம். முதலில் காவல்துறையில் இருந்த பிரச்னைகளை களைந்தோம். தேவையான அளவு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டன. ஏற்கெனவே நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பட்ஜெட் கூட்ட தொடர் போன்றவை மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன. மட்டுமல்லாது கடந்த சில ஆண்டுகளாக உ.பி அரசை விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகள் தற்போது பாஜக செயல்பாடுகளால் வாயடைத்துபோயுள்ளன.
நாங்கள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடங்கி வைத்து வருகிறோம். கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.1,780 கோடியில் 28 வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதேபோல கங்கையின் இருபுறங்களிலும் விவசாயத்தை ஊக்குவிக்க நாங்கள் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம். சரியாக சொல்வதெனில் கரையின் இருபுறமும் சுமார் 5 கி.மீ தொலைவில் வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படும்.
இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் உட்கட்டமைப்பு வளர்ச்சியிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது வாரணாசி கண்டோன்மென்ட் ஸ்டேஷனில் இருந்து கோடோவ்லியா வரை ரோப்வேக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வாரணாசி கண்டோன்மெட் ஸ்டேஷனிலிருந்து கோடோவ்லியாவுக்கு சுமார் 3.75 கி.மீ தூரம் இருக்கிறது. இதற்கிடையில் அமைக்கப்பட உள்ள ரோப்வே-ல் 5 நிறுத்தங்கள் இருக்கும். இந்த ரோப்வே திட்டம் சுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல பகவான்பூரில் நமாமி கங்கே திட்டத்தின் கீழ் 55 MLD அளவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் திறக்கப்படும். ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின்படி ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லியன் லிட்ட கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இவையெல்லாம் நம்முடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்கின்றன. ஆனால், அதையும் கடந்து இன்று விளையாட்டுதுறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இப்படியான வளர்ச்சி திட்டங்களால்தான் உ.பி வளர்ச்சியடைந்துள்ளது. குற்றங்கள் குறைந்துள்ளன. நலத்திட்டங்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதுதான் உ.பி அரசின் லட்சியமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications