வேற லெவலுக்கு மாறும் உ.பி. கிராமங்கள்.. குடிநீர் வசதியை சாத்தியப்படுத்திய யோகி.. தொடரும் அதிரடிகள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரை மாநிலம் முழுவதும் சுமார் 50% கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனை அம்மாநில பாஜகவும், மாநில அரசும் கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதுவரை யாரும் உ.பியின் முதலமைச்சராக தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவி வகித்ததில்லை. எனவே இந்த யோகி ஆதித்யநாத் புதிய சாதனை படைத்துள்ளதாக பாஜக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக யோகி ஆதித்யநாத் அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது.

இது எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படும். மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜக அடுத்த முறையும் மீண்டும் ஆட்சிக்கு வர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒருவேளை இது சாத்தியமானால் பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராவார். இவ்வாறு பிரதமரானால் நேருவுக்கு பிறகு 3வது முறையாக தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தவர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெறுவார். இதற்காகதான் பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
அதேபோல 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டுவிழா வருகிறது. இதனை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். மற்ற கட்சிகள் ஆட்சியில் அமைந்தால் இதனை சிறப்பாக கொண்டாட முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும் எனவே 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில்தான் நாட்டிலேயே அதிக அளவில் எம்பி தொகுதிகள் இருக்கிறது. எனுவே மாநிலத்தின் 80 தொகுதிகளை கைப்பற்ற பாஜக சில திட்டங்களை தீட்டியிருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதன் மூலம் உ.பிக்கு ரூ.35 லட்சம் கோடி முதலீடுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் போன்றவை பாஜக திட்டத்தின் ஒரு பகுதிதான். இதன் தொடர்ச்சிதான் தற்போது யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டு கால கொண்டாட்டம். இதன் மூலம் இதுவரை செய்து முடிக்கப்பட்ட சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது யோகி ஆதித்யநாத் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, "ஹர் கர் நல் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மாநிலம் முழுவதும் 99,16,379 குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கையை 2024ம் ஆண்டுக்குள் 2,65,46,370 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை மூலம் கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கிய மாநிலத்தின் பட்டியலில் உ.பி மூன்றாம் இடத்தில் உள்ளது. மாநிலத்தின் 22 மாவட்டங்களில் இந்த இலக்கு 50 சதவிகிதத்தை எட்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலும், யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரிலும் சுமார் 50 சதவிகிதத்திற்கும் மேல் கிராம மக்கள் குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications