பாஜக ஆட்சியில் உத்தரப் பிரதேசம் புதிய வளர்ச்சியை கண்டிருக்கிறது.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: புதிய பாரதத்தில் உத்தரப் பிரதேசம் புதியதாக வளர்ந்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும், பாஜக ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று 2023 இன் இன்ஃப்ரா பில்ட் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், புதிய பாரதத்தில் உத்தரப் பிரதேசம் புதியதாக வளர்ந்திருப்பதாகவும், பாஜக ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "கடந்த 6 ஆண்டுகளில் பல துறைகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் தற்போது அதிவேக நெடுஞ்சாலைகளின் மாநிலம் என்கிற பெயரை பெற்றிருக்கிறது.
கங்கா விரைவுச் சாலையின் பணிகள் நடைபெற்று வருகின்றன, இது நாட்டின் மிக நீளமான விரைவுப் பாதையாக இருக்கும். 25 கோடி மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் , இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் சந்தையாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், உள்கட்டமைப்பில் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீடு வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications