250% அதிகரித்த உ.பியின் ஏற்றுமதி! கைவினை கலைஞர்கள் முக்கிய காரணம்.. யோகி ஆதித்யநாத் பாராட்டு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கைவினை கலைஞர்களின் உழைப்பால் மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 250 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இப்படியாக அவர் தொடங்கிய திட்டம்தான் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு எனும் திட்டம்.

இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், இது சீன பொருட்களுக்கு மாற்றாக இருக்கிறது என கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாரம்பரிய தயாரிப்புகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதை சுட்டிக்காட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது அவற்றை உலகத் தலைவர்களுக்குப் பெருமையுடன் வழங்குவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த கண்காட்சி மாநிலத்தின் திறமையான கைவினைஞர்களின் மதிப்பை உயர்த்துகிறது.
உ.பி.யின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) பொருட்கள் இப்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு மாற்றாக இருக்கிறது. எங்களது மாநிலத்தின் கைவினைஞர்களே எங்களின் மிகப்பெரிய சொத்துக்கள். ODOP திட்டமும் விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனாவும் உ.பி.யின் ஏற்றுமதியை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்றுமதி 250 மடங்கு அதிகரித்துள்ளது. உ.பி மாநிலத்தை பொறுத்த அளவில் கார்பெட் தொழில்துறையின் மொத்த ஏற்றுமதி சுமார் ரூ.17,000 கோடி. மொத்த ஏற்றுமதியில் 60 சதவிகிதம் பதோஹி, மிர்சாபூர் மற்றும் வாரணாசியில் என 3 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்திற்கு என ஒரு இலக்கு இருக்கிறது. ஒரு டிரில்லியன் பொருளாதாரம் தான் அந்த இலக்கு. இதை சாத்தியப்படுத்த ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி இருக்கையில், தற்போது கைவினை கலைஞர்களால் மாவட்டத்தின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications