விவசாயம் செழிப்பாக இருப்பதற்கு பாஜக அரசுதான் காரணம்.. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் செழிப்பாக இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்காக பாஜக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்ததுதான் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோரக்பூரில் நேற்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பயனாளிகளிடம் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "கடந்த காலங்களை விட பாஜக ஆட்சி காலத்தில் மாநிலத்தில் கூடுதல் முதலீடுகள் குவிந்துள்ளது. 2017ம் ஆண்டுக்கு முன்னர் வரை உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது, பாஜக தற்போது மக்களுக்கான, விவசாயிகளுக்கான, தொழிலாளர்களுக்கான ஆட்சியை வழங்கி வருகிறது.

வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக மானிய விலையில் டிராக்டர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் மூலம் கரும்பு மட்டுமல்லாது எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் வேளாண்மை என்பது ஒரு நஷ்டமடையும் தொழிலாக இருந்தது. வயல்களில் கரும்பு எரிக்கப்பட்டது. அதேபோல மாதத்தில் சில நாட்கள் மட்டுமே கரும்பு ஆலைகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இது லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது.
முன்பை விட விவசாயிகள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கரும்பை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் தற்கொலை குறைந்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் முதுகெலும்பு கரும்பு சாகுபடிதான். ஆனால் இதற்கு முந்தைய அரசுகள் இதனை புரிந்துகொள்ளவில்லை. எனவே வேளாண் சார்ந்த மொத்த தொழில்களும் பெரும் நெருக்கடியை சந்தித்தது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications