மாநில வளர்ச்சியில்தான் முழு கவனம்! சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு கடிவாளமிட்ட யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தற்போது கேங் வார் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும், பாஜக அரசு மாநிலத்தின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.
கோரக்பூரில் ரூ.72 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசத்தில் கேங் வார் முற்றிலுமாக மறைந்துவிட்டது. பாஜக அரசு தற்போது மாநில வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருவதால் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் நலத்திட்டங்கள் அனைத்தும் விளிம்புநிலை மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இந்த அரசின் திட்டங்களை பெறாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்றுதான் நாங்கள் யோசிக்கிறோம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடையாது. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளி மாநிலங்களில் வேலைக்காக புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர். அங்கு கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். சரியான உணவு, இருப்பிடம், சுயமரியாதை, சம்பளம் என எதும் முறையாக இல்லாமல் தவித்தனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கு இப்படி கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே சமூக வளர்ச்சிக்கும் இந்த பாஜக அரசு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரியை உருவாக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications