உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம்.. பாஜகவின் இலக்கு இதுதான்! யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: "மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாஜகவின் நோக்கம். எதிர்கட்சிகளை போல பாஜக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகியின் 6 ஆண்டு ஆட்சியை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம், இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் நீடிக்கவில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். என இந்த 6 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் அறிவித்த திட்டங்கள் குறித்து பாஜக அரசு மக்கள் மத்தியில் சாதனை விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறது.

அதேபோல மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக செய்த சாதனையை சொல்லி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரக்யாராஜில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், "மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாஜகவின் நோக்கம். எதிர்கட்சிகளை போல பாஜக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர்,
"2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்களுடன் அப்போதைய அரசாங்கம், அதாவது தற்போதைய எதிர்க்கட்சிகள் சமரச பாதையை பின்பற்றின. இதே போக்கு மக்களின் நலனிலும் ஏற்பட்டது. தற்போதைய எதிர்க்கட்சியினர் மக்கள் நலனில் கூட சமரசம் செய்துகொண்டனர். ஆனால் பாஜக எதிர் திசையில் இயங்கியது. நாங்கள் ஒருபோதும் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இதனால்தான் மக்கள் இரண்டாவது முறையாக எங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
நாங்கள் இந்த மாநிலத்திற்காக ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் உத்தரப் பிரதேசம் சீரான வளர்ச்சியை கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் துப்பாக்கிகளுடன் திரிந்த இம்மாநில இளைஞர்கள் தற்போது டேப்லெட்களுடன் கல்வியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றனர். இன்று உத்தரப் பிரதேசத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது. குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகள் என அனைத்தும் சரியாக செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications