அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல்! புதிய முயற்சியை முன்னெடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: அரசு ஊழியர்களுக்கு சிறந்த பாதுகாப்பான மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் அரசு ஊழியர்களின் பணி சூழலை எளிமையாக்கவும், அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை சரி செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "அரசு ஊழியர்களுக்கான பாதுகாப்பான பணி சூழலை உருவாக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஊழியர்களின் பிரச்னைகளை ஆராயவும், அதற்கு தீர்வு காணவும் மாதாந்திர கூட்டங்களை நடத்த அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த உத்தரவை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என் தற்போது அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், கோட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.
அரசு ஊழியர்கள்தான் அரசு எந்திரத்தின் அச்சாணி. அவர்கள் இல்லையெனில் எந்திரம் செயல்படாது. எனவே அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதைதான் நாங்கள் இப்போது செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications