சிறுதானிய விளைச்சலை அதிகரிக்க அதிரடி மானியம்! விவசாயிகளுக்கு அள்ளி கொடுக்கும் உத்தரப் பிரதேசம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறுதானிய விளைச்சலை அதிகரிக்க ஏராளமான புதிய திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே உத்தரப் பிரதேசத்தில் தினை விளைச்சலை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்களின் மூலம் தினை விதை உற்பத்தி, தினை பதப்படுத்துதல், தினை நடமாடும் விற்பனை நிலையம் மற்றும் தினை அங்காடி நிறுவுதல் ஆகியவற்றுக்கான முதலீட்டில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு வழங்கும். அதாவது தினை விதிகளை ஏற்றுமதி செய்ய தொழில் தொடங்க விரும்புவோர்களுக்கு உ.பி அரசு ரூ.10-20 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் என்றால் அனைவருக்கும் கரும்புதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு உ.பியில் கரும்பு தொழிற்சாலைகள் அதிகம். ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காததால் கரும்பு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே ஆலைகளும் இயங்காமல் நின்றுவிட்டன. ஆனால் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விளைச்சல் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக சிறு தானியங்களை அதிக அளவு பயிரிட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவேதான் பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications