அழகான நகரமாக மாறிய அயோத்தி.. பிரதமர் மோடியின் கனவு நிஜமானது! நெகிழ்ந்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: கடவுள் அயோத்திக்கு வருவதற்கு முன்னர், அயோத்தியை அழகான நகரமாக உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். அதை உத்தரப் பிரதேச அரசு சாத்தியமாக்கியிருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத், "500 ஆண்டுக்கால காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது. இறைவன் வருவதற்கு முன், அயோத்தியை மிக அழகான நகரமாக உருவாக்க வேண்டும் என்று பிரதமர் திட்டமிட்டிருந்தார். இந்த திட்டத்தை உ.பி அரசு சாத்தியமாக்கியிருக்கிறது. பிரதமருக்கு மக்கள் இன்று பிரமாண்டமான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

அயோத்தி 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை மற்றும் 8 வழிச்சாலை இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், புதிய ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 2 அம்ரித் பாரத் ரயில்களும் அயோத்திக்கு பெருமை சேர்த்திருக்கின்றன. அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்டியிருப்பது நாட்டின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் எண்ணமாக இருக்கிறது. அதன் விளைவுதான் இத்தனை நலத்திட்டங்களை உத்தரப் பிரதேசம் பெற்றிருக்கிறது. மாநிலத்தின் உள்கட்டமைப்பு எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதற்கு அயோத்திதான் மிகப்பெரிய உதாரணம். அயோத்தியின் செழுமையான வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், நவீன, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையுடன், 15,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மாநிலத்திற்கு அர்ப்பணித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications