எங்கள் திட்டங்கள் மக்களுக்கானவை.. உத்தரப் பிரதேசத்தின் சிறப்பு திட்டங்கள் குறித்து யோகி பெருமிதம்
லக்னோ: பாஜக அரசு பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை நாங்கள் வாக்கு வங்கியை மையப்படுத்தி எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும், எங்கள் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானவை எனவும் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "பாஜக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்த திட்டங்கள்தான் அதிகம். இந்த திட்டங்கள் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டது. உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,000 கோடி நாங்கள் ஒதுக்கியிருந்தோம். இதன் மூலம் 2023-2024ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகள் அளவுக்கு உயரும்.

மாநிலம் முழுவதும் 880 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளை மேம்படுத்த முதற் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான திட்டங்களையும் பள்ளிக்கல்வித்துறை தயாரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும். அதேபோல சர்வதேச அளவில் மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் இந்த திட்டம் உதவும் என ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச பள்ளிக் கல்வி இயக்குநர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் கூறுகையில், "ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிஜமாகவே மிகப்பெரிய தொகையாகும். அதேபோல 704 பள்ளிகள் அடுத்தக்கட்டத்திற்கு தரம் உயர்த்தப்படுகின்றன. தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளதுபடி குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது.
ஆனால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் ஒவ்வொரு நடுநிலை பள்ளிகளிலும் சுமார் 450 மாணவர்கள் பயிலும் அளவுக்கு பள்ளிகள் மேம்படுத்தப்படும். சத்துணவுத் தோட்டம், வைஃபை & ஆன்லைன் சிசிடிவி கண்காணிப்பு, விளையாட்டு மைதானத்துடன் கூடிய பல செயல்பாட்டுக் கூடம் மற்றும் நவீன தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் பள்ளிகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டம் எங்களுக்கு வாக்குகளை பெற்றுத்தர போவதில்லை. ஆனால் இது மாநிலத்தின் தரத்தை உயர்த்தும்.
இதேபோல பெண்களின் பாதுகாப்பு, மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், சிறுகுறு தொழில் முனைவோர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications