அதிகாலையில் சோகம்! மதுரையில் சுற்றுலா ரயிலில் தீ விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு
மதுரை: மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்தாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்திருக்கிறது.
மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலின் பெட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த ரயிலில் 60க்கும் அதிகமான வடமாநில பயணிகள் பயணித்துள்ளனர். இந்த ரயில் திருப்பதி-ராமேஸ்வரம்-கன்னியாகுமரி போன்ற தலங்களுக்கு பயணிக்க இருந்தது. இந்நிலையில் மதுரையில் ரயில் நிற்க வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சமயல் செய்யும் போது தீ பரவியிருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ பரவிய பெட்டியை மட்டும் ரயில்வே துறையினர் தனியாக பிரித்துள்ளனர். அந்த பெட்டியில் பரவிய தீயை தீயணைப்பு துறையினர் முழுமையாக அணைத்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரயிலில் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், இந்த சிலிண்டர் எப்படி வந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அதிகாலை 5 மணியளவில் டீ போட கேஸை பற்ற வைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். புனித தலங்களுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications