அடுத்த அதிரடி.. மதுரையில் தகராறில் ஈடுபட்டதாக பாஜகவை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது.. ஏன் தெரியுமா?
மதுரை: மதுரை போலீசார் நேற்று பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை சென்னையில் அதிரடியாக கைது செய்தனர். இவர் அவதூறு பரப்பியதாக கைதான நிலையில் தற்போது வேறு ஒரு வழக்கில் மதுரையை சேர்ந்த 3 பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்ஜி சூர்யா. மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு எஸ்ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு.வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார்' எனப் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து எஸ்ஜி சூர்யா பொய் தகவல்களை பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு சென்னை திநகரில் உள்ள எஸ்ஜி சூர்யாவின் வீட்டுக்கு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு மதுரைக்கு அழைத்து வரப்பட்டவர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜூலை மாதம் 1ம் தேதி வரை அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் தற்போது மதுரையில் 3 பாஜக நிர்வாகிகளை நேற்று இரவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன்படி மதுரை பாஜக கிழக்கு மண்டல செயலாளரான மேல பனங்காடியை சேர்ந்த ஆனந்த் ராஜ் (வயது 37), பாஜக 28 வது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவரான செல்லூரை சேர்ந்த மலைச்சாமி (23), பாஜக பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினரான கோசா குளத்தை சேர்ந்த வைரமுத்து (38) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 3 பேரும் அடிதடி பிரச்சனை தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தற்போது கைதான வைரமுத்து என்பவர் பணத்தை வாங்கி கொண்டு தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து உறவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்று இரவில் அவர்கள் 3 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். அப்போது வைரமுத்து என்பவர், ‛பாரத் மாதாகீ' என கோஷமிட்ட நிலையில் போலீசார் சத்தம் போடக்கூடாது எனக்கூறினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications