குடும்ப விவகாரம்: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை- உறவினர்கள் 4 பேர் அதிரடி கைது!
மதுரை: குடும்ப விவகாரத்தில் மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுருகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக பாலமுருகனின் உறவினர்கள் 4 பேர் மதுரை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் பகுதியில் சொக்கிகுளம் வல்லபாய் தெருவில் இன்று காலை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பாலமுருகன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்தது. மதுரையில் காவல்நிலையம் பகுதியில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொலையாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்திருந்தார். மேலும் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த அன்புத்தம்பி பாலசுப்பிரமணியன் (பாலமுருகன்) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது.

கன்னியாகுமரியில் எனது ஆருயிர் தம்பி சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது தம்பி பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும்; கைதுசெய்து, அக்கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாலமுருகன் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர்தான் கொலையாளிகள் என போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பாலமுருகன் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலமுருகனின் தம்பி மகனின் மாமனாருடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இத்தகைய பின்னணியில்தான் பாலமுருகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications