சிறுமியை காவு வாங்கிய சிறப்பு வகுப்பு.. கோடையில் ’ஸ்பெஷல் கிளாஸ்’ எடுக்க தடை! வெளியான அதிரடி உத்தரவு
மதுரை: மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலைப் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி ஆருத்ரா பள்ளியில் பின்புறத்தில் உள்ள 12 அடி தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக மதுரை கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை கேகே நகர் பகுதியில் இயங்கி வரக்கூடிய ஸ்ரீ மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த மழலையர் பள்ளியை திவ்யா என்பவர் நடத்தி வருகிறார், கோடைகால பயிற்சி முகாமில் நான்கு ஆசிரியர்கள், தாளாளர் ஆகியோர் மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பள்ளியில் பயிலக்கூடிய மற்ற பள்ளி மழலையர்கள் இந்த கோடைகால சிறப்பு வகுப்பில் பயின்று வருகிறார்கள்.
மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது நான்கு வயது மகள் ஆருத்ரா ஸ்ரீ இளர் மழலையர் பள்ளியில் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளி வளாகத்தில் சுமார் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட மற்ற குழந்தைகள் உடனடியாக மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக அங்கு ஓடி வந்த ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அரை மணி நேரம் போராடி தொட்டிக்குள் கிடந்த சிறுமியை மீட்டு பள்ளி அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை அதிகளவு தண்ணீர் குடித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தாளாளர் திவ்யா மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது சம்பவம் தொடர்பாக பள்ளியில் பயிலும் கூடிய மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு வருகை தந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சியின் போது 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் ஆருத்ரா 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக அனுமதியுடன் மழலையர் பள்ளி இயங்கியதா என்பது குறித்தும் முறையான பாதுகாப்பு வசதிகள் உடன் பள்ளி இயக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அரசு விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்பு நடத்தியதாகவும், உரிய பாதுகாப்பு விதிகளை மீறி ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று தனியார் மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மழலைபள்ளி நிர்வாகத்துக்கு தபால் மூலம் மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக மதுரை கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நர்சரி & பிரைமரி, தொடக்கப் பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கோடை கால விடுமுறை நாட்களில் கண்டிப்பான முறையில் செயல்படக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
கோடைகால விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications