சாத்தான்குளம் சம்பவம்: 5 போலீஸாரிடம் விசாரணை தொடங்கியது சிபிஐ!
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 5 போலீஸாரிடையே சிபிஐ விசாரணையை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தியது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு எடுப்பதற்கு முன்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி அவர்களிடம் விசாரணை நடத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் நேற்று சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஹேமந்த் குமார் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை நீதிமன்றத்தில் 5 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும் போலீஸ் வைத்து விசாரிக்க அனுமதி தரக் கூடாது என 5 பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அது போல் அந்த 5 பேரும் சிபிஐ காவலில் செல்ல மறுப்பு தெரிவித்தனர். பின்னர் நீதிபதி தனித்தனியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரிடம் கேட்டதற்கும் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரும் வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிபிஐ காவலுக்கு செல்லும் முன் 5 காவலர்களுக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு அவர்கள் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக வழக்கு தொடர்பான ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து 5 பேரிடமும் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications