அன்னை உள்ளம் அன்பின் இல்லம்! அம்மாவின் 83வது பிறந்தநாள்! மதுரைக்கு பறந்து வந்த அமைச்சர் பிடிஆர்!
மதுரை: தனது அம்மாவின் 83வது பிறந்தநாளையொட்டி தனக்கிருந்த எல்லா பணிகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பறந்து வந்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை சென்னையில் குடியிருந்தாலும் அவரது அம்மா ருக்மணி அம்மாள் இன்னும் மதுரை பாளையம் பங்களாவில் தான் வசித்து வருகிறார். மகன் அமைச்சர் என்றாலும் அவருடன் அரசு பங்களாவில் சென்னையில் வசிப்பதை விரும்பாத ருக்மணி அம்மாள் மதுரையிலேயே வசித்து வருகிறார்.

இதனிடையே தொகுதிப்பணிகள், அமைச்சர் என்ற முறையில் கலந்துகொள்ள வேண்டிய அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என பழனிவேல் தியாகராஜன் வாரத்திற்கு 3 நாட்களாவது மதுரையில் உள்ள பூர்வீக பங்களாவில் தங்குவார். இந்நிலையில் தனது அம்மாவின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு விதவிதமாக கேக் வெட்டி தனது அன்பை பகிர்ந்தார். அதுமட்டுமல்ல அம்மாவின் பிறந்தநாளன்று மதுரையில் இருக்க வேண்டும் என்பதற்காக தனது மற்ற பணிகளை ஓரமாக ஒதுக்கி வைத்தார்.
தனது தாயார் பிறந்தநாள் குறித்து சமூக வலைதளப்பக்கங்களில் அமைச்சர் பிடிஆர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''என் வாழ்விலும் சிந்தனையிலும் மிகப்பெரும் தாக்கம் செலுத்தியவரான என் அம்மாவை, அவரது 83வது பிறந்தநாளான இன்று வணங்குகிறேன். அவரது முயற்சியும் ஆதரவும் இல்லாவிட்டால், என் முன்னோர்களின் பொதுச்சேவை மரபைத் தொடர என்னால் முயற்சிக்க முடிந்திருக்காது.
நான் 1987இல் தொடங்கி அமெரிக்காவில் வசித்துவந்தேன். என் அப்பா 2006இல் இறந்தபோது நான் நியூயார்க்கில் வங்கியாளராக இருந்தேன். அதன்பின் பத்தாண்டுகள் கழித்து மதுரை மத்திய தொகுதியில் 2016 தேர்தலில் நான் போட்டியிடும் வரை, எங்கள் குடும்பத்தின் மக்கள் நல சேவைகளைத் தொடர்ந்து நடத்தியவர் அம்மாதான்.மதுரையில் என் குழுவினர், சக கட்சிப் பணியாளர்கள் பலரும் எங்களுடன் இணைந்து இந்த நாளை மகிழ்ச்சிகரமான, மறக்கமுடியாத ஒன்றாக்கினர்.''
அமைச்சர் பிடிஆரின் சமூக வலைதளப் பதிவை பார்த்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட இன்னும் பல திமுக முக்கியப் பிரமுகர்களும் சமுக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications