பேரையூர் அருகே வெள்ளத்தில் சிக்கி டிரைவர் பலி.. ஓடையில் இறங்கிய கடைசி நிமிட திக் திக் வீடியோ
மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே ஓடையை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவ வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது.
மதுரை மாவட்டம் பேரையூரில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கால்வாய்கள், ஓடைகள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டை என நிரம்பியுள்ளன.

ஜேசிபி டிரைவர்
இந்த நிலையில் சாப்டூர் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (30). இவர் ஜேசிபி டிரைவர். இவரது ஊருக்கு ஓடையை கடந்துதான் செல்ல வேண்டும் என தெரிகிறது. இந்த நிலையில் இவர் நேற்று மாலை வாழைத்தோப்பு அருகே உள்ள காட்டில் வேலை செய்து விட்டு வீடு திரும்பினார்.

அதிக தண்ணீர்
அப்போது வழியில் இருந்த ஓடையில் அதிகமான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவர் சிரித்து கொண்டே ஓடையை கடக்க முயன்றார். அப்போது அவருடன் இருந்தவர்கள் ஓடையில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது, அதனால் போக வேண்டாம் என எவ்வளவோ தடுத்தனர். அவர் அவர்கள் சொல்வதை கேட்காமல் ஓடையை கடக்க முயன்றார்.

அதிக வெள்ளப்பெருக்கு
அப்போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்ததால் அவர் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஓடையில் தேடி பார்த்துவிட்டு அவரது உடலை மீட்டனர். இது குறித்து பேரையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஓடையை கடக்க வேண்டாம்
வெள்ளம் அதிகரிக்கிறது, ஓடையை கடக்க வேண்டாம் என உடனிருந்தவர்கள் எத்தனைோ எச்சரிக்கை விடுத்தும் அவர் ஓடைக்குள் இறங்கும் கடைசி நிமிட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என எத்தனையோ முறை எச்சரிக்கை விடுத்தும் இது போல் உதாசீனப்படுத்திவிட்டு செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications