மதுரை குலுங்க குலுங்க.. குவிந்த அதிமுக தொண்டர்கள்! களைக்கட்டிய பொன்விழா மாநாடு!
மதுரை: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மாநில அளவிலான மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சுமார் 3,000 தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒரு வருடம் கூட இல்லை. எனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களை தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை பொறுத்த அளவில் தென் மாவட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓரணியாக இருந்த போதே தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 10 எம்.பி தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதற்கு பின்னர் நடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மொத்தமிருந்த 58 தென் மண்டல எம்எல்ஏ சீட்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களை மட்டுமே வென்றது. அப்போதும் அதிமுக ஒரே அணியாகதான் இருந்தது. இந்நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்திருக்கிறார். டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தென் மண்டலத்தை பொறுத்த அளவில் எடப்பாடி தரப்பை விட ஓபிஎஸ் மற்றும் டிடிவி, சசிகலா தரப்பிற்குதான் அதிக வாக்கு வங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இதை உடைத்து தென் பகுதியிலும் தனது பலத்தை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி, அதிமுக 'பொன்விழா எழுச்சி மாநாட்டை' நடத்துகிறார். இன்று மதுரையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்காக வளையங்குளத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாடு என்பதால் வழக்கமான எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் ஆட்களை இறக்க எடப்பாடி நிர்வாகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். எனவே அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் மதுரையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
மாநாடு இன்று தொடங்கினாலும் நேற்று காலை முதலே மதுரைக்கு தொண்டர்கள் வரத் தொடங்கிவிட்டனர். சென்னையிலிருந்து அதிமுக தொண்டர்களுக்காக இயக்கப்பட்ட ரயிலும் நேற்று காலை மதுரை வந்து சேர்ந்தது. இந்த ரயில் கூடல்புதூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல பேருந்துகளிலும் அதிகமான தொண்டர்கள் மதுரை வந்து சேர்ந்த நிலையில் மதுரை மாநகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தங்கும் விடுதிகள், மண்டபங்களில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
நேற்று காலை வந்த தொண்டர்கள் மதுரையை சுற்றிபார்க்க தொடங்கிவிட்டனர். எனவே சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளன. இன்று காலையில் மாநாடு தொடங்குகிறது. இதற்காக நேற்று சேலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி கார் மூலம் மதுரை வந்திருந்தார். இன்று காலை 8.45 மணிக்கு 51 அடி உயர கொடி கம்பத்தில் எடப்பாடி அதிமுக கொடியேற்றி வைத்து மாநாட்டை தொடக்கி வைக்கிறார். முன்னதாக அவரை வரவேற்க சுமார் 3,000 தொண்டர்கள் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications