பெயரை வெளியிடாதீங்க.. மதுரையில் ஏழைகளுக்காக மருத்துவமனை கட்ட ரூ.6 கோடி தந்த "வள்ளல்".. யார் அவர்?
மதுரை: மதுரையில் ஏழைகளுக்கு மருத்துவமனை கட்டுவதற்காக நபர் ஒருவர் ரூபாய் 6 கோடியை நன்கொடையாக வழங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
சிவானந்த ஆசிரமம் என்ற பெயரில் மதுரை நத்தம் சாலை அருகே சரந்தாங்கியில் அமைந்துள்ள ஆசிரமம் மதுரையில் மிகவும் பிரபலம். இங்கே வெளிநாட்டினர் பலரும் பயிற்சி பெற்று வருகின்றனர். யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை இவர்கள் மேற்கொள்வது வழக்கம்.

இங்கே ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஏகப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் நேற்று இந்த ஆசிர வளாகத்தின் அருகில் புதிதாக மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டது.
இது இலவச மருத்துவமனை ஆகும். ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இலவசமாக மருத்துவமனை திறக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா அழைக்கப்பட்டு அவர் மூலம் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.
நிதி: மர்ம நபர் ஒருவர் கொடுத்த நிதியின் அடிப்படையில் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டது. ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற திட்டத்தில் ஒருவர் 6 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார். நான் ஏழை மக்களுக்காக இந்த நிதியை கொடுக்கிறேன். என்னுடைய பிரபலத்திற்காக இந்த நிதியை கொடுக்கவில்லை.
அதனால் என்னுடைய பெயரை வெளியே விட வேண்டாம். இந்த நிகழ்விற்கு என்னை அழைக்க வேண்டாம். நான் கொடுக்கும் 6 கோடி ரூபாயில் இலவச மருத்துவமனை ஒன்றை தொடங்குங்கள். நான் இங்கே இருந்து அந்த மருத்துவமனையை இயக்க முடியாது.
அதனால் நீங்களே அதை செயல்படுத்துங்கள்., என்று அந்த பிரமுகர் கேட்டுள்ளார். இதனால் அவரின் பெயரை வெளியிடாமல் அவர் அளித்த நிதியில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது.
யார் அவர்?: அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஏழை எளிய மக்கள் பயன்அடைய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இந்த உதவியை செய்துள்ளார். அவர் வழங்கிய நிதியில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது.
2 மருத்துவர்கள், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கே சேர்க்கப்பட்டு உள்ளனர். அதேபோல் லேப், எக்ஸ்ரே, இசிஜி, ரத்த அழுத்தம் சோதனை செய்யும் வசதிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அறுவை சிகிச்சை அரங்கு, இதயப் பரிசோதனை அரங்குகளும் வைக்கப்பட்டு உள்ளன.
இதெல்லாம் அவர் கொடுத்த தொகையில் கட்டப்பட்டவை ஆகும். இதோடு அவர் கொடுத்த தொகையில் அருகிலேயே 2 கோடி ரூபாய்க்கு 2 மாடி கட்டிடம் ஒன்றையும் பெரிதாக கட்டி உள்ளனர். ஆசிரம தேவைக்காக இதை கட்டி உள்ளனர்.
நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தவும் இந்த பணத்தை பயன்படுத்தி உள்ளனர். அங்கே அவசர சிகிச்சை வழங்கும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. அலங்காநல்லூர், பாலமேட்டை சுற்றியுள்ள கிராமத்தினர் இதனால் அதிக அளவில் பயன் அடைவார்கள்.
இதனால் மருத்துவ சிகிச்சை பெற இவர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியது இல்லை. தன்னுடைய பெயரை வெளியிடாமல் இவர் செய்த கொடை மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications