மிரண்டுபோன மதுரை.. நடுரோட்டில் கிடந்த மனித தலை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
மதுரை: மதுரையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே நடுரோட்டில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த மனிதத் தலையால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம், திருப்பாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள நத்தம் சாலையில் பாதி எரிந்த நிலையில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று நேற்று முன்தினம் கிடந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த துண்டிக்கப்பட்ட தலையை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவரின் தலை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தலை எப்படி இங்கு வந்தது, கொலையா, வேறு ஏதேனும் காரணமாக என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரித்து வந்த நிலையில், காணாமல் போன நபர்களுடைய விவரங்கள் குறித்தும் விசாரணையைத் தொடங்கினர். பின்னர், தலை கிடந்த சாலையில் இருந்து மோப்ப நாய் உதவியுடன் மனித உடலை தேடினர். அப்போது, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
அந்த வீடியோக்களை ஆய்வு செய்தபோது, பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த தலையை நாய் ஒன்று இழுத்துவரும் காட்சி அதில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, எதாவது மயானத்தில் இருந்து அந்த தலையை நாய் இழுத்து வந்திருக்கலாம் என்று கருதிய போலீஸார் அப்பகுதியில் இருந்த மயானத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த தலை மதுரை, நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளுடையது என்பது தெரியவந்தது. 70 வயது மூதாட்டியான அவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மயானத்தில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மழை பெய்ததால் பாதியிலேயே உறவினர்கள் அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனால் பாதி எரிந்த நிலையில் கிடந்த தலையை நாய் இழுத்து வந்து சாலையில் போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தலை பேச்சியம்மாளுடையது என்பதை அவரது உறவினர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications