திருமாவளவனை சீண்டிய "வணக்கம் டா மாப்ள" தேனி அருண்.. அடித்து உதைத்த விசிக ஆதரவாளர்கள்
மதுரை: பழனி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறிய கருத்தை விமர்சித்த 'வணக்கம்டா மாப்ள' இன்ஸ்டா பிரபலமான தேனி அருணை விசிகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த அருண் மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவும் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் நீண்ட காலம் கழித்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பெரும் விவாதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கிளப்பியிருந்தார். அதன் பிறகு ஸ்டாலின் சந்திப்பு, மது ஒழிப்பு மாநாடு என அனைத்தும் வீரியம் இல்லாமல் மிகச் சாதாரணமாக நடந்து முடிந்துவிட்டன. அதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை சித்தாந்த எதிரி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு என்று ஒரு வெடிகுண்டையும் வீசியிருந்தார். இதனால், தமிழக அரசியல் வட்டாரமே களேபரமானது. இதற்கிடையே ஆசை வார்த்தை கூறினால் தாங்கள் வந்துவிடுவோம் என விஜய் நினைப்பதாக கூறியிருந்தார், அவரது கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார் திருமாவளவன்.
இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் திருமாவளவன் அண்மையில் தரிசனம் செய்தார். அப்போது, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தர் போகர் தான் வாழ்ந்ததற்கான அடையாளமாக நவபாஷாணத்தால் ஆன முருகர் சிலையை உருவாக்கினார். புலிப்பாணி சித்தர் மற்றும் அவரது வாரிசுகளின் ஜீவசமாதிகள் இங்குள்ளன. அவை அனைத்தையும் தரிசனம் செய்தேன்.
எனக்கு எவ்வித நேர்த்திக்கடனும் இல்லை. மொட்டை போடுவதற்காகவோ, தேர்தலில் நிறைய இடங்களை வாங்கி தா என்று முருகனிடம் கேட்கவோ இங்கு வரவில்லை. அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி, முதல்வர் பதவி கேட்டும் முருகனை தரிசனம் செய்ய வரவில்லை. எனது முன்னோர் வாழ்ந்த இடம் என்பதால் பார்க்க வந்தேன் என்று கூறியிருந்தார்.
சோஷியல் மீடியாக்களில் வணக்கம் டா மாப்ள தேனியில் இருந்து என்ற வாசகம் மூலமாக பிரபலமானவர் தேனியைச் சேர்ந்த அருண். இவர் திருமாவளவனை விமர்சித்து வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், கோயிலுக்கு போனீங்க.. சாமி கும்புட்டீங்க.. பூசாரி ஏதோ பிரசாதம் கொடுத்தாங்க.. போனவரு பேசாம வந்திரணும். அங்குள்ள சிலைகளை எல்லாம் சுத்தி பார்த்துவிட்டு, விநாயகர் அசிங்கமா இருக்காரு.. முருகன் அழகா இருக்காருனு சொல்றீங்க.. அது எங்க பேமிலி மேட்டர். நாங்க பார்த்துக்கிறோம் சாமி.
நம்ம கையில இருக்கிற ஐந்து விரலும் ஒரே மாதிரியாக இருக்கிறதில்லை. அதற்காக கையை வெட்டிக்கிறோமா? இல்லைதானே.. இதேபோலதான் மற்ற மதங்களை விமர்சிப்பீர்களா என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோவால் கடும் கடுப்பில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தேனி அருணின் வேலை செய்யும் இடத்திற்கே சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, நான் எதுவும் தவறாக சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த தேனி அருண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து கொண்டே தேனி அருண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நான் எதை பற்றியும் தப்பா பேசல. எல்லா கடவுளும் ஒன்னு அப்படீன்னு சொன்னதுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் என்னை அடிச்சுட்டாங்க.. என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications