பட்டப்பகலில் பயங்கரம்.. வீடுபுகுந்து இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற ஒருதலைக்காதலன்.. மதுரையில் ஷாக்!
மதுரை : ஒருதலைக் காதல் விவகாரத்தில் பட்டப் பகலில் வீடு புகுந்து இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆத்திரத்தில் பெண்ணின் கழுத்தை அறுத்து ஒருதலைக் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் பொன்மேனி பகுதியை சேர்ந்த அபர்ணா (19) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார் ஹரிஹரன். அதற்கு பெண் வீட்டார் பெண் தர மறுத்துள்ளனர்.
மேலும் பெண்ணிற்கு வரும் ஆகஸ்ட் மாதம் முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடத்த நிச்சயித்துள்ளனர். அண்மையில் தான் அபர்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தான் காதலித்த பெண்ணை வேறொருவருக்கு நிச்சயம் செய்ததால் ஆத்திரமுற்ற ஹரிஹரன் அபர்ணாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இன்று தனது வீட்டில் தனியாக இருந்த அபர்ணாவை வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஹரிஹரன் வீடு புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications