பெட்ரூமில்.. மனைவி விழுந்தது கூட தெரியாமல் தீயுடன் போராடிய கணவன்.. உலுக்கிய ஏசி மரணம்.. என்ன நடந்தது
ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தம்பதி இருவருமே உயிரிழந்தனர்
மதுரை: மனைவி மயங்கி கீழே விழுந்து கிடப்பது கூட தெரியாமல், ரூமில் பற்றி கொண்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் கணவன் ஈடுபட்டுள்ளார்.. இறுதியில் அதே தீயில் தம்பதி இருவருமே பலியாகி உள்ளனர்... இது குறித்த கூடுதல் தகவல்களும் வெளியாகி மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
Recommended Video
விருதுநகரை சேர்ந்தவர் சக்தி.. இவர் மதுரையில் ஆர்கானிக் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.. இவரது மனைவி பெயர் சுபா.. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மகள் காவியா, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்... மகன் கார்த்திகேயன் காளவாசலில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

வாடகை வீடு
எஸ்விபி நகரில் மாடியுடன் கூடிய வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.. இவர்கள் 4 பேருமே மாடியில் உள்ள ஏசி ரூமில் ஒன்றாக தூங்குவது வழக்கம். அப்படித்தான் நேற்றிரவு 4 பேரும் தூங்கி உள்ளனர்.. ஆனால், நடுராத்திரி மழை பெய்ததால், குளிர் அதிகமாகி உள்ளது.. அதனால், காவியாவும், கார்த்திகேயனும், ஏசி ரூமில் இருந்து வெளியே வந்து வீட்டின் கீழே உள்ள ரூமுக்கு சென்று தூங்கி உள்ளனர்.

மின்கசிவு
அப்போது தம்பதி இருந்த ரூமில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏசியில் திடீர் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஏசியில் இருந்து புகையும் வெளியே வர ஆரம்பித்துள்ளது.. தூக்கத்தில் இருந்து எதேச்சையாக விழித்து பார்த்த சக்தி கண்ணன், ரூம் முழுக்க புகை படர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. உடனே மனைவியை எழுப்பி உள்ளார்.. ஆனால், அதற்குள் புகை அதிகரிக்க ஆரம்பித்தது..

மயக்கம்
இதனால் தம்பதி இருவரும் பாத்ரூமில் இருந்து தண்ணியை எடுத்து வந்து ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.. உடனே ஏசி திடீரென வெடித்து சிதறியது.. அங்கிருந்த ஒயர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தீப்பிடித்து எரிந்தன.. இதனால் மேலும் புகை அதிகமாகிவிட்டது.. அந்த புகை மயக்கத்தில், மனைவி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.. ஆனால், மனைவி கீழே மயங்கி விழுந்தது கூட தெரியாமல், சக்தி கண்ணன் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார்..

திணறல்
அப்போதும் தீ அடங்கவில்லை.. வேகமாக பற்றி கொண்டு எரிந்தது.. அப்போதுதான் மனைவி கீழே விழுந்துள்ளதை பார்த்து, அவரை தூக்கிக் கொண்டு ரூமில் இருந்து வெளியே வர முயன்றார்.. ஆனால், புகை அந்த ரூம் முழுக்க இருந்ததால், கதவு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் திணறி உள்ளார்.. கொஞ்ச நேரத்தில் சக்தி கண்ணனுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு, அவரும் அதே ரூமில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.. தீ அறை முழுக்க பரவி, தம்பதி இருவரும் அதிலேயே கருகி இறந்துவிட்டனர்.

கரும்புகை
அதற்கு பிறகுதான் அறையில் இருந்த புகை, வெளியே வர தொடங்கி உள்ளது.. மாடியில் இருந்து கரும்புகை வெளிவருவதை கண்ட அக்கம்பக்கத்தினர், சக்தி கண்ணன் வீட்டிற்கு வேகமாக வந்து, கீழ் ரூமில் தூங்கி கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினர்.. அவர்களுக்கு அப்போதுதான் மாடியில் தீப்பிடித்தது தெரியவந்தது. பிறகு பதறியடித்து கொண்டு மாடிக்கு செல்ல முயன்றனர்.. ஆனால், அவர்களால் மாடி படிக்கட்டு ஏற மடியாத அளவுக்கு புகை மண்டலம் சூழ்ந்துவிட்டது..

அதிர்ச்சி
இதனால் செய்வதறியாது தவித்த, மகன் கார்த்திகேயன் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.. தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மாடி ரூமுக்கு சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்... சுமார் ஒரு மணி நேரம் போராடியே அந்த தீயை அணைத்தனர்.. இறுதியில் கருகிய நிலையில் இறந்து கிடந்த சக்தி கண்ணன், சுபா ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு வெளியே எடுத்து வந்தனர்.. பெற்றோரின் சடலங்களை பார்த்த பிள்ளைகள் கதறி கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்க செய்தது.

கதறல்
இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்... தம்பதியின் உடல்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது... ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. எனினும், வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியே சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கி உள்ளது.












Click it and Unblock the Notifications