சட்டசபை முன் முதல்வர் நாற்காலியில் அஜித்குமார்.. தினுசான "வலிமை அப்டேட்"!.. மதுரை ரசிகர்கள் போஸ்டர்
மதுரை: நடிகர் அஜித்குமார் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு மதுரையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரை, அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் அவ்வப்போது வித விதமான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபவது வழக்கம்.
கோவையில் நேற்று கூட விஜய் ரசிகர்கள், புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா என்றும் தலைமையேற்க சரியான நேரம் (time to lead) என்றும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

தூங்காநகரம் அஜித் ரசிகர்கள்
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த "தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்" என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சிலர் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், "எங்களின் வலிமையை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும்!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல்வர் நாற்காலியில் அஜித்
மேலும், சட்டசபை முகப்பு கட்டடத்தின் பின்னணியில் முதல்வர் நாற்காலியில் நடிகர் அஜித்குமார் அமர்ந்திருப்பது போன்றும் போஸ்டரை வடிவமைத்து உள்ளனர். நடிகர் அஜித்குமார் அவரது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே கலைத்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு ரசிகர்கள் வழங்கிய "தல" எனும் பட்டத்தை கூட தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை
அது போல் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய தமிழிசை, அஜித்தை போல் அவரது ரசிகர்களும் நல்லவர்கள்தான். பிரதமர் மோடியின் திட்டங்களை நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பேசியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் நான் விரும்பவில்லை
இவர் பேசிய அடுத்த நாளே நடிகர் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் யார் பெயரையும் குறிப்பிடாமல் சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ எனது ரசிகர்களின் பெயரையோ சம்பந்தப்படுத்தி வரும் செய்திகளை நான் விரும்பவில்லை. அதனாலேயே நான் ரசிகர் மன்றங்களை கலைத்தேன். தேர்தல் நேரத்தில் வரும் இது போன்ற செய்திகளை நான் விரும்பவில்லை.

அரசியலுக்கு அஜித்தை அழைக்கும் ரசிகர்கள்
குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என எனது ரசிகர்களை நிர்பந்தித்தது இல்லை. இனியும் மாட்டேன் என்று அஜித்திடம் இருந்து அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது. தனது திரைப்படங்களில் கூட அரசியல் பஞ்ச் வசனங்களையோ அரசியல் களம் தொடர்பான கதையையோ விரும்பாத அஜித்தை தற்போது அரசியலுக்கும் இழுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் மதுரை மாநகர் பகுதியில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications