"தலைமைச் செயலகத்தில்" நடிகர் கார்த்தி.. அரசியலுக்கு வருகிறாரா? மதுரையில் முழுக்க இதே பேச்சு!
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை பார்க்கும் போது நடிகர் கார்த்தியும் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அரசியலில் உள்ள ஓட்டைகள் குறித்து குரல் கொடுத்த கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். அந்த கட்சி சாதித்தது என்ன என்றால் அதற்கு பதில் இல்லை. அது போல் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்டது.
ஆனால் அவர் உடல்நலனை கருத்தில் கொண்டு அரசியல் வர இயலாது என தெரிவித்துவிட்டார். விஜய், சிம்பு ஆகியோரையும் அவர்களது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
சிம்பு
சிம்பு இதுகுறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அது போல் விஜய் வரும் 2026 க்குள் கட்சியை தொடங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்தியும் அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். இதற்காக மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
நடிகர் கார்த்தி
அந்த போஸ்டரில் நடிகர் கார்த்தி தலைமைச் செயலகம் முன்பு நிற்பது போல் உள்ளது. அவருக்கு வலது பக்கம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படமும் இடது பக்கம் மற்றொரு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம்பெற்றுள்ளது. மதுரை வடக்கு மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றத்தினர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
நல்ல எண்ணங்கள்
நல்ல எண்ணங்களை மக்களிடம் சேர்ப்போம். தம்பி கார்த்தி வழியில் அனைவரும் கைகோர்ப்போம் என கோஷங்கள் இடம்பெற்றிருப்பதுடன் உழவன் எனும் லோகோவும் நம்மாழ்வார் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் அரசியலுக்கு கார்த்தியை அழைப்பது போன்ற வாக்கியங்கள் ஏதும் இல்லை.
தலைமைச் செயலகம்
எனினும் எதற்காக தலைமை செயலகத்தின் படம் பயன்படுத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட் , வேளாண் சட்டங்கள் குறித்து வெளிப்படையாக தனது கருத்துகளை இடித்துரைத்தவர் கார்த்தி. நடிகர் சூர்யாவையும் அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைத்து வந்த நிலையில் அவர் இதுவரை வரவில்லை. எனவே கார்த்தி அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.