அரசியலில் குதிக்கும் நடிகர் சூரி? மதுரையில் தனக்கென தனிக்கூட்டம்! பிறந்தநாள் பரிசாக தங்கமோதிரம்!
மதுரை: நடிகர் சூரியின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களும், சகோதரர்களும் இணைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாக்கூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் சூரி. சென்னையில் வசித்து வந்தாலும் சொந்த மண்ணான மதுரையில் தான் தனது தொழில் முதலீடுகளை செய்து வருகிறார் நடிகர் சூரி. அம்மன் என்ற பெயரில் மதுரையில் இவர் நடத்தும் தேநீர் கடைகளும், உணவகங்களும் வியாபாரத்தில் சக்கை போடு போட்டு வருகின்றன.

அமைச்சர் மூர்த்திக்கு நடிகர் சூரி ஒரு வகையில் சொந்தக்காரரும் கூட. ஆனால் அவரிடம் காட்டும் நெருக்கத்தை விட மதுரையின் மற்றொரு அமைச்சரான பழனிவேல் தியாகராஜனிடம் கூடுதல் நெருக்கமாக இருக்கக் கூடியவர் சூரி. ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தனது கேண்டீனை கூட அமைச்சர் பிடிஆரை அழைத்து தான் திறந்து வைத்தார் சூரி.
அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நட்பு வட்டத்திலும் இடம் பிடித்திருக்கிறார். எந்தவொரு பெரிய பின்னணியும் இல்லாமல் சொந்தமாக முன்னேறி இன்றைய நிலைக்கு வந்தவர் சூரி. இந்தச் சூழலில் அவரது அண்மைக்கால நடவடிக்கைகளை பார்க்கும் போது, மதுரை சுற்றுவட்டார மக்களுக்கு ஏதேனும் தன்னால் முடிந்த நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்று சூரி நினைப்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

அந்த வகையில் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட சூரி பிறந்தநாளன்று, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள் அவரது ரசிகர் மன்ற தம்பிகள். ஒரு குழந்தைக்கு தலா ஒரு கிராமில் மோதிரம் அணிவித்திருந்தால் கூட 20 குழந்தைகளுக்கு மொத்தம் இரண்டரை சவரன் தங்கம் மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பையும் சூரி தரப்பு தட்டாமல் செய்து வருகிறது. மொத்தத்தில் நடிகர் சூரி இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அரசியலில் களமிறங்குவார் என கணிக்கத் தோன்றுவதாக கூறுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications