விஜய் ரகசிய வருகையின் பின்னணி.. சென்னை டூ திருச்சி- திருப்புவனம், 130 கிமீக்கு ரூட்டை மாற்றியது ஏன்?
மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் வீட்டுக்கு நடிகர் விஜய் நேற்று இரவு வந்து அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கி இருந்தார். நடிகர் விஜய் வருகை கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததால், யாருக்குமே தெரியவில்லை. கட்சி நிர்வாகிகளுக்கு கூடதெரியாமல் வைத்திருந்தார்கள். நேற்று விஜய் திருச்சிக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து காரிலேயே 130 கிமீ பயணித்து திருப்புவனம் வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் 28 வயதாகும் அஜித்குமார். இவரை காரில் தங்க நகைகள் மாயமான புகாரில் சந்தேகத்தின் பேரில் திருப்புவனம் தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் தாக்கி விசாரித்த போது காவலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
தமிழக முதல்வர் ஸ்டாலினே நடந்த சம்பவத்திற்காக அஜித்குமாரின் குடும்பத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இந்தவழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட்டார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.
காவலர்கள் பணியிடை நீக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் உறுதி
சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்" இவ்வாறு கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஜித்குமாரின் தாயாருக்கு தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதிமுக பக்கபலமாக நிற்கும் என்றும் உறுதி தெரிவித்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போனில் ஆறுதல் தெரிவித்த நிலையில்,அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை அனுப்பியும் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், நேரிலேயே சென்று ஆறுதல் தெரிவித்தார்.
கார் ஒன்று வந்தது
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கார் ஒன்று அஜித்குமாரின் வீட்டுக்கு வந்தது. அந்த காரில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், முகத்தை சற்று மூடியபடி வந்திறங்கினார். அவருடன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் வந்தார். அதன்பின்னரே, வந்திருப்பவர் நடிகர் விஜய் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.
விஜய் அஞ்சலி
அஜித்குமாரின் வீட்டுக்கு சென்ற விஜய், அங்கிருந்த அவரது தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன்குமார் ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அஜித்குமாரின் படத்திற்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த தகவல் பரவியதை தொடர்ந்து பலரும் திரண்டனர். இதனால், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதனிடையே ஆறுதல் தெரிவித்த சிறிது நேரத்தில் நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
2 லட்சம் நிதியுதவி
நடிகர் விஜய் வந்தது குறித்து அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் கூறுகையில், "த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் எங்கள் வீட்டிற்கு நேரில் வந்து என் தாயாரிடம் ஆறுதல் தெரிவித்தார். அவர் ரூ. 2 லட்சம் நிதியுதவியும் வழங்கியிருக்கிறார். எந்த உதவியாக இருந்தாலும், த.வெ.க. நிர்வாகிகளிடம் கூறுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார். அவரது வருகையை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
விஜய் வருகை ரகசியம்
தவெக தலைவர் விஜய்யின் வருகை கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு கூட விஜய் வந்தது கடைசி நேரத்தில் தான் தெரிந்திருக்கிறது. முன்பு நடிகர் விஜய் மதுரை வந்த போது, மதுரை விமான நிலையத்தை ரசிகர்கள் திரண்டு ஸ்தம்பிக்க வைத்தது. கோவையில் சொல்லவே வேண்டாம். கோவை விமான நிலையம் விஜய் வந்த போது பிரளயமே நடந்தது. பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க முடியாத அளவிற்கு நிலைமை எல்லை மீறி போனது. விஜய் ரசிகர்களின் கூட்டத்தால் மொத்த கோவையும் இரண்டு நாள் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
விஜய் தந்த உறுதி
இதுபோன்ற நிலைகளை தவிர்க்கும் வகையில், நடிகர் விஜய் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்துள்ளார். அதன்பின்னர் யாருக்கு தெரியாமல் காரில் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்திற்கு வந்திருக்கிறார்.வந்தவர் நேராக ஆறுதல் சொல்லியதுடன் 2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அத்துடன் தவெக துணை நிற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications