நயன்தாரா வீடியோவை விற்றால் என்ன? இதெல்லாம் திமுகவின் ப்ளானாம்.. காயத்ரி ரகுராம் ஆவேசம்
மதுரை: நடிகர் தனுஷ் - நடிகை நயன்தாரா பிரச்சனை இன்று விவாதமாக மாறி இருக்கும் நிலையில், அதுவா முக்கியம் எனவும், நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன எனவும், இது திமுகவின் திசை திருப்பும் வேலை என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாராவும் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். அந்தப் படத்தை தனுஷ் இயக்கி இருந்தார். இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணம் ஆவணப் படமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தன் மீதான தனிப்பட்ட வன்மத்தின் காரணமாக தனுஷ் 'நானும் ரவுடி தான்' பட காட்சிகளை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என நயன்தாரா மிகப்பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் வாழு வாழ விடு என விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பேசிய வீடியோவை பதிவிட்டு இருந்தார்.
இதனையடுத்து இரு தரப்புக்குமே ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன எனவும், இது திமுகவின் திசை திருப்பும் வேலை என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். மதுரை ஓபுளா படித்துறை பகுதியில் அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகையும் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர்," சமூக நீதி சமூக நீதி என சொல்லும் திமுக சிறுபான்மையினருக்கு என்ன செய்துள்ளது. தனுஷ் நயன்தாரா பிரச்சனை இன்று விவாத மேடையில் செல்கிறது. அதுவா நாட்டிற்கு முக்கியம். நயன்தாரா நடித்த சம்பாதித்தால் என்ன, திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன. தனுஷ் கூட சண்டை போட்டால் என்ன போடாமல் விட்டால் என்ன. இதெல்லாம் திமுகவின் திசை திருப்பும் வேலை.
ஆனால் இன்று போதைப் பொருள் ஒரு சாக்லேட் போல சாதாரணமாக அனைத்து மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது. மதுரையில் சாலைகள் மோசமாக இருக்கிறது அமைச்சர் பி.டி.ஆர் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார். படித்த திறமை வாய்ந்த ஒரு அமைச்சர் மதுரையில் இருந்தார் அவரும் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்று விட்டார். தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்த ஆயிரம் ரூபாய் எல்லா பெண்களுக்கும் போய் சேர்வது கிடையாது. பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்றால் அது திமுக அரசு தான்.
தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம் என மக்கள் பயன்பெறும் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி விட்டனர். மக்களுக்கு தேவையான ஒரு நல்ல திட்டம் கூட திமுக அரசு செய்யவில்லை. சத்துணவு திட்டம் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். தற்போது காலை உணவு திட்டத்தில் எந்த ஒரு தரமும் இல்லை. பொங்கல் பரிசு எடப்பாடி ஆட்சியில் வாரி வாரி கொடுத்தார்.
கடந்த பொங்கலுக்கு திமுக கொடுத்த அரிசி பொங்கல் தொகுப்பில் புழுக்கள் இருந்தன. விளம்பரத்தில் மட்டும் திமுக வேற லெவலில் உள்ளது மக்களுக்கான திட்டங்களில் செயல்பாடுகளில் ஒன்றும் இல்லை. உதயநிதி ஒரு செங்கலை வைத்து எல்லாரையும் ஏமாற்றி விட்டார். 2026 ஆம் ஆண்டு திமுகவின் மக்கள் நிச்சயமாக வீட்டிற்கு விரட்டி அடிப்பார்கள். இதுபோன்றே பிரச்சினைகளை திசை திருப்ப, இது திமுகவின் கிளப்பிவிட்ட விவகாரம்" என்றார்.












Click it and Unblock the Notifications