மதுரையில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அலறிய மாணவர்கள் பெற்றோர்கள்.. கடைசியில் புரளியாமே!
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 8 தனியார் பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக அந்த பள்ளிகளில் மோப்ப நாய்களில் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், அது புரளி என தெரியவந்தது.
மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் இருக்கும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக வாகனங்கள், சுற்றுவட்டார பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய வெடிகுண்டு சோதனையில் பள்ளிகளில் எந்த ஒரு வெடிகுண்டும் இல்லை எனத் தெரியவந்தது. எனவே இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டறியப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு முடிவடைந்ததாகவும், எங்கும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்படவில்லை என்றும் எனவே மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மார்ச் மாதத்திலும், சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதமும் மாங்காடு பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்கள் யார் என இதுவரை கண்டறியப்படாத நிலையில், மீண்டும் மீண்டும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications