வார்னிங்.. டிஎஸ்பியின் ஒற்றை வார்த்தை! ஊர்வலத்தை கைவிட்டு கலைந்த அதிமுகவினர்! மதுரையில் பரபர சம்பவம்
மதுரை: மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்று அதிமுகவினர் வாகனங்களில் ஊர்வலம் சென்றபோது டிஎஸ்பி திடீரென தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்த நிலையில் தொண்டர்கள், நிர்வாகிகள் கலைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை அதிமுக தீவிரமாக தொடங்கி உள்ளது. சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

இந்நிலையில் தான் மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஓ பன்னீர் செல்வம் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தென்மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டை எடப்பாடி பழனிச்சாமி நடத்த உள்ளார்.
இந்த மாநாட்டில் 10 லட்சம் பேரை திரட்ட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார். தற்போது மதுரையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான பணிகள் 65 ஏக்கரில் நடைபெற்று வருகிறது.
மேலும் 35 ஏக்கரில் சமையலறை, உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படுகின்றன. 25 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வெயில் என்பது மதுரையில் அதிகமாக உள்ளது. இதனால் தொண்டர்களுக்காக 5 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மாநாட்டில் பங்கேற்க வரும்படி மதுரையில் அதிமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் இன்று பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மாநாட்டுக்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களை அழைத்தார்.
இந்த வேளையில் அதிமுகவினர் பைக்கில் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றார். அப்போது டிஎஸ்பி வசந்த குமார் தடுத்து நிறுத்தினார். நடுரோட்டில் அதிமுகவினர் பைக்குடன் அப்படியே நின்றனர். இதையடுத்து அனுமதியின்றி ஊர்வலம் செல்வது சட்டப்படி குற்றம். மீறினால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். இதையடுத்து அதிமுகவினர் பைக் ஊர்வலத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications