இந்தியாவின் இரும்பு மனிதரே.. வல்லபாய் படேலின் மறு உருவமே.. அமித் ஷாவை புகழ்ந்த ஆர்பி உதயகுமார்!
மதுரை: இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் மறு வடிவமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதரான அமித் ஷா ஆகியோரின் சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதாக கூறிய ஆர்பி உதயகுமார், தமிழ்நாட்டின் உரிமையை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது உறுதியாகியது.

அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பின் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று பதிவிட்டார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அவர்களுடன் பாஜக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்தால், மிகப்பெரிய சவாலை திமுக கூட்டணிக்கு அளிக்க முடியும். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழக மக்களின் கோரிக்கைகளை முன் வைத்ததாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு மழுப்பலான பதிலையே எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆர்பி உதயகுமார் பேசுகையில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக அமித் ஷாவை, 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமி சந்தித்தது பற்றி பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி முன் வைத்துள்ள கோரிக்கைகளை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இரு மொழிக் கொள்கையை தொடர வேண்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார். அமித் ஷாவை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று ஆர்பி உதயகுமார் புகழ்ந்திருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications