''அப்பாவுக்கு மறக்காம ஓட்டுப்போடுங்கோ''.. தேர்தல் பிரசாரத்தில் அசத்தும் ஆர்.பி.உதயகுமாரின் மகள்!
மதுரை: அதிமுக அரசு விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு சலுகைகள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
ஆர் பி உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மகள் பிரியதர்சினியும் வாக்குகள் சேகரித்தார்.
வாக்கு வேட்டை
தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
ஆர்.பி.உதயகுமார் பிரசாரம்
இந்த நிலையில் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கூடக்கோவில்,கொக்குளம் பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். செல்லும் வழியெங்கும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர். இந்த தேர்தல் பிரசாரத்தில் சுவாரசியமாக ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்சினியும் தந்தைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக நிறைவேற்றிய திட்டங்கள்
பிரசாரத்தின் போது அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் எங்கள் உயிர் போனாலும் உங்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வீடுவீடாக வந்து நேரடியாக பலமுறை உதவிகள் வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்.அதிமுக அரசு விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
அமைச்சரின் மகள் பிரசாரம்
அதிமுக தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு சலுகைகள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று கூறினார். ஆர் பி உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மகள் பிரியதர்சினி பேசுகையில், "நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளையும் அமைச்சரும் எனது தந்தையுமான ஆர்.பி. உதயகுமார் உங்கள் வெற்றிச் சின்னம் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.