ஜெ. பாணியில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி வெளியிடப் போகும் ’அந்த பிரகடனம்’- ஆல் இந்தியாவே அலறுமாம்!
மதுரை: அண்ணா திமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரவு பகலாக அதிமுக தலைவர்கள் முழுவீச்சில் மாநாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி- என்ற அறிவிப்புடன் அதிமுகவின் கோஷ்டி பூசல்கள் ஒதுக்கப்பட்டு ஓர்ம் கட்டப்பட்டுவிட்டன. இதனால் முழு கெத்துடன் எடப்பாடி பழனிசாமி எனும் ஒற்றை தலைமையில் அதிமுக மதுரை மாநாடு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதிமுகவின் பல்வேறு தலைவர்களை உள்ளடக்கிய பல்வேறு குழுக்கள் மாநாட்டு பணிகளை இரவும் பகலுமாக மேற்கொண்டு வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த ஒற்றைத் தலைமையின் கீழ் மதுரை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஏதோ ஒரு அதிமுக பொதுக்கூட்டம் போல அமைந்துவிடக் கூடாது என்பது அக்கட்சியின் மேல்மட்ட தலைவர்களின் தீவிர விவாதமாக இருக்கிறதாம். தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தவறவிட்டுக் கொண்டிருக்கும் பாயிண்டுகளில் தங்களை வலுவாக நிலை நிறுத்திக் கொள்வதன் மூலம் அதிருப்தி மக்களின் மனங்களை அறுவடை செய்ய முடியும் என ஆலோசிக்கின்றனராம்.
அதுவும் குறிப்பாக அதிமுக -பாஜக கூட்டணி எப்படியானதாக இருக்க வேண்டும் என்கிற விவாதம் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடக்கிறதாம். தற்போதைய நிலையில் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அக்கட்சிக்கு அடுத்ததாக 2-வது இடம் அதிமுகவுக்குதான். அதனைத்தான் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் போது பிரதமர் மோடியும் வெளிப்படுத்தி இருந்தார்.
பாஜக கூட்டணியின் பிரதான கட்சிகளில் முதன்மையானது அதிமுக. ஆகையால் இந்த கெத்தை விட்டுவிடாமல் சில விஷயங்களில் கறார் காட்டினால் நல்லது என்பது ஒருதரப்பு கருத்தாம். குறிப்பாக இஸ்லாமியர் உட்பட சிறுபான்மையினர் விவகாரங்களில் பாஜக வருத்தப்படுமே.. பாஜக தலைவர்கள் ஏதாவது சொல்வார்களே என்கிற அச்சத்தை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆணித்தரமாக ஜெயலலிதா பாணியில் அதிரடியாக அறிவித்தால் அகில இந்திய அளவில் அதிமுக இமேஜ் சட்டென உயரும் என சில இளைய தலைவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்களாம். அதாவது நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம்.. லோக்சபா தேர்தலுக்கும் பாஜக அணியில்தான் இருப்போம். ஆனால் இந்த நாட்டில் தாயா பிள்ளையாக வாழ்கிற இஸ்லாமியர் உட்பட சிறுபான்மையினருக்கு அச்சம் தரக் கூடிய பாஜகவின் அல்லது மத்திய பாஜக அரசின் எந்த ஒரு நடவடிக்கையையும் அண்ணா திமுக ஒரு போதும் ஏற்காது; இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களுக்கும் இன்ன பிற சிறுபான்மையினருக்கும் என்றைக்கும் அண்ணா திமுக அரணாக இருக்கும் என்கிற ரேஞ்சில் ஒரு பிரகடனத்தை வெளியிட்டால் எப்படி இருக்கும் ? என்பதும் அதிமுக தலைவர்களின் விவாதமாக இருக்கிறதாம்! இது தொடரபாக அதிமுக நிர்வாகிகளிடம் நாம் விசாரித்த போது, சில விஷயங்கள் சீரியசாக பேசி வருகிறோம். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று மட்டும் சொல்லிவிட்டு நகருகின்றனர்.












Click it and Unblock the Notifications