“அதிமுக யாருக்கும் அடிமை இல்லை".. எல்.முருகன் பேச்சுக்கு செல்லூர் ராஜு கொடுத்த பதில்!
சென்னை: "நாங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை, எஜமானரும் இல்லை" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு என பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்ட நிலையில் செல்லூர் ராஜு பதில்கொடுத்துள்ளார்.

பாஜகவை போல் அதிமுகவையும் ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதாக தவெக தலைவர் விஜய் பேசி இருந்தார். அதுகுறித்த கேள்விக்கு நேற்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "ஆர்.எஸ்.எஸ் என்பது சமூக சேவைக்கான இயக்கம். நூற்றாண்டு கண்ட இந்த இயக்கம் குறித்து ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரும் பேசியுள்ளனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட இயக்கம் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு? முதலில் விஜய்தான் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் மூலம் விஜய் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுக யாருக்கும் அடிமையும் இல்லை, எஜமானரும் இல்லை. எங்களுக்கும் யாரும் அடிமையும் அல்ல, நாங்களும் யாருக்கும் எஜமானரும் அல்ல.
எங்கள் கட்சிக்கு என்று தனி கொள்கை உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் அதன்படி தான் நடக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியும் அப்படித்தான் நடக்கிறார். அதிமுக கொள்கையில் இருந்து என்றும் வழுவாது என எல்லோருக்கும் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications