மதுரையில் முன்கூட்டியே முகாமிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள்! விடுதிகள் ஹவுஸ்ஃபுல்! மாநாடு ருசிகரம்!
மதுரை: மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டை ஒட்டி இப்போதே அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டுக்கான பணிகளும், முன்னேற்பாடுகளும் கடந்த ஜூலை 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இரவு பகல் பாராமல் நடைபெற்று வந்த பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாடு கிளைமேக்ஸ் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் 1 லட்சம் பேருக்கு குறையாமல் பங்கேற்பார்கள் எனக் கருதும் அதிமுக தலைமை அவர்களுக்கான அடிப்படை வசதிகள், மூன்று வேளை சாப்பாடு, தண்ணீர் என எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவுள்ளது. அதேபோல் தங்குவதற்கு திருமண மண்டபங்களும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.
தொண்டர்களுக்கு திருமண மண்டபங்கள் என்றால் அதிமுக முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்கு மதுரையில் உள்ள நட்சத்திர விடுதி உட்பட அனைத்து விடுதிகளும் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதனால் வரும் 18, 19, 20, 21 ஆகிய நாட்களும் மதுரையில் உள்ள முக்கிய விடுதிகள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல்லாக காட்சியளிக்கின்றன.
அதேபோல் தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கருப்பு நிற சஃபாரி சீருடை வழங்கப்பட்டு யார் யாரை எந்தெந்த கேட்களில் விட வேண்டும் என இன்று பாடமே நடத்தப்பட்டுள்ளது. கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா ஆகியோர் அதற்கான பயிற்சிகளை இன்று மாநாட்டுத் திடலில் வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications