அதிமுக போராட்டத்தின் மறுவடிவம் விஜய் மாநாடு-இரு கட்சிகளுக்கும் ஒரே சிந்தனை-ஆர்பி உதயகுமார் பாராட்டு
மதுரை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் வரவேற்கத்தக்கவை; தமிழக வெற்றிக் கழகத்தால் அண்ணா திமுகவுக்கு எள்முனையளவும் பாதிப்பு இல்லை; திமுகவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் எம்ஜிஆரை சுட்டிக் காட்டி நடிகர் விஜய் பேசியிருப்பதும் வரவேற்கத்தக்கது என்றார் ஆர்பி உதயகுமார்.
மதுரையில் இன்று ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 2,000 தொண்டர் படையினர் சீருடையுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

விஜய் மாநாடு சிறந்த துவக்கம்: விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் சிறந்த துவக்கம். கிராண்ட் ஓபனிங்.. பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார். இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை; திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக உண்ணாவிரதத்தில் இளைஞர்கள் பங்கேற்றனர். ஆகையால் இளைய சமுதாயம் திமுகவுக்கு எதிராக இருக்கிறது. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மன்னராட்சிக்கு மகுடம் சூட்டுவதை உதயநிதிக்கு மகுடம் சூட்டுவதை ஏற்கவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இளைஞர்கள் அதிமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். தற்போது நடிகர் விஜய் மாநாடும் இந்த செய்தியையே சொல்கிறது.
வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு: திமுக மிருகபலத்துடன் இருப்பதால் அனுபவம், தகுதி, உழைப்பும் இல்லாமல் வாரிசு அரசியலாக உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார். இதனை எல்லாம் எதிர்த்துதான் இளைய சமுதாயம், விஜய் மாநாட்டில் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் அண்ணா திமுகவின் கோட்பாடு. இதனை எம்ஜிஆர்தான் முதன் முதலாக தமிழ்நாட்டு மக்களுக்கு தனி இயக்கம் தொடங்கி தெரிவித்தார். எம்ஜிஆரை நடிகர் விஜய் தன் மாநாட்டில் சுட்ட்டிக்காட்டி பேசியதை வரவேற்கிறோம்.
எடப்பாடியின் கருணை உள்ளத்தால் விமர்சிக்காத விஜய்: தமிழ் சினிமா துறை இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் ஆக்டோபஸ் பிடியிலே சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. தொழில்துறையும் கருணாநிதி குடும்பத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது. இதே நிலைமை தொடந்தால் தமிழ்நாடு துன்பப்படும்; துயரப்படும். விஜய் திரைப்படத்துக்கு சிக்கல் வந்த போது எடப்பாடி பழனிசாமி உடனடியாக தாய் உள்ளத்துடன் அவரது கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தார். எடப்பாடியின் கருணை உள்ளத்தை தெரிந்து கொண்டதாலேயே புரிந்து கொண்ட காரணத்தினாலேயே அறிந்து கொண்ட காரணத்தினாலேயே விமர்சிக்கவில்லை நடிகர் விஜய் என்பது யதார்த்தமான உண்மை.
தன்னெழுச்சியாக வந்த இளைஞர்கள்: திமுகவுக்கு முடிவுரை எழுத எடப்பாடி பழனிசாமி மனஉறுதியுடன் நின்று போராடுகிறார். திமுகவுக்கு இருக்கிற எதிர்ப்பு அலை காட்டுத் தீயாக இருக்கிறது; விஜய் மாநாட்டில் அங்கே இருந்தவர்கள் எல்லாம் தன்னெழுச்சியாக, அரசு மீதான வெறுப்பால் பங்கேற்றனர். அதிமுகவுக்கு எள்முனையளவும் பாதிப்பு கிடையாது. திமுகவுக்குதான் நடிகர் விஜய்யால் பாதிப்பு ஏற்படும். அதிமுகவின் போராட்டத்தின் மறுவடிவமாகத்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை பார்க்கிறோம்.
அதிமுக, தவெக ஒரே சிந்தனை: எங்கள் எண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது; எங்களது எதிரிகள் ஒன்றாக இருக்கிறது; மக்கள் நலன் என்ற சிந்தனை ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் வீடும் உணவும் வேலையும் வேண்டும் என்றார் விஜய். இதனை திட்டங்களால் செயல்படுத்த முடியும். இது வரவேற்கத்தக்கதுதானே. மீனும் பிடித்து கொடுப்போம்.. மீனை பிடிக்கவும் கற்றுக் கொடுப்போம். இவ்வாறு ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications