அஜித்குமார் வழக்கு விசாரணை அறிக்கை இன்று ஐகோர்டில் தாக்கல்.. பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார். மடப்புரம் கோயில், திருப்புவனம் பகுதியில் விசாரணை நடத்தி முடித்துள்ளார்.விசாரணை அறிக்கையை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த விசாரணை அறிக்கையில் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலின் காவலாளி அஜித்குமாரை (தற்காலிக ஊழியர்) போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் இருந்து தப்ப முயன்ற போது, வலிப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக முதலில் போலீசார் கூறினார்கள்.ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசார் தாக்கியதில் தான் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அஜித்குமாரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் காவல்துறையினருக்கு அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்? புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை சிசிடிவி பதிவை மறைக்க விரும்புகிறீர்களா?
ஏன் காவல்துறையினர் வெளி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு போலீசார் எதற்கு? முழு உண்மையையும் சொல்ல காவல்துறை ஏன் மறுக்கிறது. யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.
இறுதியாக அஜித்குமார் வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனிடையே காவலர்கள் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இது ஒருபுறம் எனில், காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார். மடப்புரம் கோயில், திருப்புவனம் பகுதியில் விசாரணை நடத்தி முடித்துள்ளார்.விசாரணை அறிக்கையை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த விசாரணை அறிக்கையில் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications