“திருப்புவனம் நிகிதா மோசடி பேர்வழி.. புடிச்சு ஜெயில்ல போடுங்க!” பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்!
மதுரை: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் அஜித் குமார் எனும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் இளைஞர் மீது புகார் அளித்த இளம்பெண் நிகிதா மோசடி பேர்வழி என்று புகார்கள் எழுந்திருக்கின்றன.
கடந்த ஜூன்.26ம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்கு நிகிதா எனும் இளம்பெண் தனது தாய் சிவகாமியுடன் வந்திருக்கிறார். இவர்கள் வந்த காரை பார்க் செய்ய சொல்லி கோயில் செக்யூரிட்டியாக இருந்த அஜித் குமாரிடம் சாவி கொடுக்கப்பட்டிருக்கிறது. திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்று நிகிதா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகார்தான் அஜித் குமாரின் உயிரை பறித்துள்ளது.

இந்நிலையில், இந்த புகாரை கொடுத்த நிகிதா எனும் பெண் மீது தொடர்ச்சியான மோசடி புகார்கள் எழுந்திருக்கின்றன. தற்போது பேராசிரியர் ஒருவரும் நிகிதா மீது புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "நான் பி.எட் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய மாணவியாக நிகிதா இருந்தார். அவர் ஒருவகையில் எனக்கு ரத்த சொந்தமும் கூட. அதுதான் கடைசியில் எனக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் திருப்புவனம் கோயிலில் நடக்க முடியாமல் நாடகம் போட்ட சிவகாமி அம்மாள், 2010ல் எனக்கு போன் செய்து, இரண்டே நாட்களில் அரசு வேலை உனக்கு கிடைத்துவிடும். ஆனால் ரூ.9 லட்சம் தேவை. உடனே கொண்டு வா என்று கூறினார். அப்போது மணி இரவு 11.45 அடுத்த நாளே கேட்ட பணத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் சொன்னபடி வேலையை ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. தேர்தல் தேதியை அறிவித்துவிட்டார்கள் எனவே கொஞ்சம் தாமதமாகும் என்று சொன்னார்கள்.
ஆனால் இப்போது வரை எனக்கு அரசு வேலையும் கிடைக்கவில்லை, என்னுடைய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. என்னிடமிருந்து பணத்தை பெற்றது நிகிதாவின் தந்தை ஜெயப்பெருமாள்.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று என்று முயன்றால் அவர்கள் ஆள் அட்ரசே இல்லாமல் போய்விட்டார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் குறித்து செய்தி பேப்பரில் வெளியாகியிருந்தது. டெப்டி கலெக்டராக இருந்து ஓய்வுபெற்ற ஜெயபெருமாள், சிவகாமி அம்மாள் பிசிகல் டைரக்டர் என்று நினைக்கிறேன். அவர் மகள் நிகிதா படித்து முடித்த உடன் அரசு கல்லூரியல் பேராசியராக வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
எப்படியோ அவர்களை கண்டுபிடித்து என்னுடைய பணத்தை திரும்ப கேட்டேன். பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லி விரட்டிவிட்டார்கள். ஆலம்பட்டியை சேர்ந்த முருகேசன், முத்துக்கொடி, வசந்தம் நகரை சேர்ந்த வங்கி ஊழியர் என பலரிடம் இவர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். வங்கி ஊழியர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் தனது மகனுக்கு வேலைக்காக பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் பணமும் திரும்ப வரவில்லை, வேலையும் கிடைக்கவில்லை.
என்னையும் எனது குடும்பத்தையும் மட்டுமல்லாது ஊரில் பல குடும்பங்களை இவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அஜித் குமார் மரணத்தை தொடர்ந்து, வழக்கு விசாரணை நிகிதா பக்கம் திரும்பிய நிலையில் அவரும் அவரது தாயாரும் தலைமறைவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications