அஜித் குமார் கொலை வழக்கு.. உத்தரவிட்ட அதிகாரி யார்? சிபிஐ விசாரணைக்கு ஆஜரான 5 முக்கிய நபர்கள்!
மதுரை: அஜித் குமார் லாக் அப் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 5 பேர் ஆஜராகி இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று அஜித் குமார் சகோதரர் நவீன் குமார், அஜித் குமாரின் நண்பர்களான அருண் குமார், வினோத், பிரவீன் மற்றும் கார்த்திக் வேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். திருட்டு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமாரை போலீசார் மிகவும் மோசமாகத் தாக்கினர். அவருக்கு தண்ணீரில் மிளகாய்ப் பொடி கொடுத்து காவல்துறையினர் அடித்துள்ளனர். இதனால் சிறுநீரில் ரத்தம் கசிந்து அஜித் குமார் உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் தனிப்படையைச் சேர்ந்த 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அஜித் குமார் குடும்பத்தினரிடம் சாரி கேட்டதோடு, இழப்பீட்டையும் அளிப்பதாக உறுதி கொடுத்தார். தொடர்ந்து அஜித் குமார் சகோதரருக்கு அரசுப் பணியும், பட்டா நிலமும் அளிக்கப்பட்டது.
அதேபோல் அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிடப்பட்டது. இதன்பின் விசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ மோகித் குமார் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே ஆகஸ்ட் 20ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜூலை 14 முதல் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியது.
கடந்த 2 நாட்களாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய சிபிஐ, அஜித் குமாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 5 பேருக்குச் சம்மன் அனுப்பியது. இந்த 5 பேரும் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார், அஜித் குமார் நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார், வினோத், பிரவீன் மற்றும் கோவில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல் ஆகிய 5 பேரும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார்கள். இதில் ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார் மற்றும் வினோத் ஆகியோரும் திருட்டு வழக்கு தொடர்பாக அஜித் குமாருடன் விசாரணையில் இருந்தனர்.
இதனால் காவல் நிலையத்தில் அஜித் குமார் விசாரணையின் போது நடந்ததை கண்டறிய சிபிஐ விசாரிக்க உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் மடப்புரம் காளி கோவில் சிசிடிவி காட்சிகளையும் சிபிஐ கைப்பற்றி இருக்கிறது. இதனிடையே நிகிதாவின் நகையைத் திருடியது விவகாரத்தையும் சிபிஐ கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், வரும் நாட்களில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அஜித் குமார் வழக்கில் காவலர்களுக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இதனால் சிபிஐ விசாரணையில் அந்த விவகாரம் அம்பலமாகும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications