அஜித் குமார் உடலில் 44 காயங்கள்.. மாநிலமே தனது குடிமகனை கொலை செய்துள்ளது.. நீதிபதிகள் காட்டம்!
மதுரை: மடப்புரம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அஜித் குமாரின் உடலில் மொத்தமாக 44 இடங்களில் காயங்கள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல் அஜித் குமாரின் உடலில் எந்த உறுப்பையும் போலீசார் விட்டு வைக்கவில்லை என்று கூறிய நிலையில், காவலர்கள் கூட்டாக சேர்ந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், திருட்டு வழக்கின் விசாரணையின் போது காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எம்.எஸ்.சுப்பிரமணியன், மரியா கிளீட் முன்பாக விசாரணை நடந்து வருகிறது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
காலையிலேயே காவல்துறையினரை நோக்கி நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிலையில், தற்போது அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது மாஜிஸ்திரேட் வெங்கடாபதி பிரசாத், கோவில் உதவி ஆணையர், மதுரை மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
44 காயங்கள்
இதனை பார்த்த நீதிபதிகள், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அஜித் குமாரின் உடலில் மொத்தமாக 44 காயங்கள் இருந்துள்ளது. அஜித் குமார் உடலில் எந்த பாகங்களும் விடுபடாமல், அத்தனை இடங்களிலும் காயம் உள்ளது. அவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. இது சாதாரண கொலை வழக்கு இல்லை.
இயக்கியது யார்?
மரக்கட்டை, இரும்பு கொண்டு தாக்கப்பட்டுள்ளார். அதிகாரமே இத்தகைய மனநிலையை காவல்துறையினருக்கு தந்திருக்கிறது. இந்த தாக்குதல் நிகழ்வை இயக்கியது யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மூத்த அதிகாரியையாவது அக்கழு கொண்டிருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்கக் கூடாது.
மாநிலமே குடிமகனை கொலை செய்துவிட்டது
மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது. இதற்கு காரணமான உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். கோவில் சிசிடிவி காட்சிகள் எடுத்ததாக காவல்துறை அறிக்கையில் இல்லை. சம்பந்தப்பட்ட இடங்களில் சாட்சியங்களை சேகரித்தது யார்? குற்றம் நடந்த இடத்தில் ரத்தக்கறை என்ன ஆனது? சாட்சியங்களை பாதுகாக்க தவறியது ஏன்? அஜித் குமார் தாக்கப்பட்டது சிசிடிவியில் பதிவாகி இருக்கிறதா?
கொடூரமான செயல்
போலீசார் கூட்டாக சேர்ந்து இந்த கொடூரமான செயலை அரங்கேற்றி இருக்கிறது. இந்த வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டது வெறும் கண்துடைப்பு. அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. வரும் காலங்களில் எந்த காவல்துறையினரும் இதுபோல நடந்து கொள்ள கூடாது. இதற்கு காரணமாக உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications