ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை.. என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்.. அண்ணாமலை கொடுத்த ட்விஸ்ட்!
சிவகங்கை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை என்றும், அவர் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் ஓபிஎஸ், இப்போது தனித்துவிடப்பட்டுள்ளார். அதிமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக பதிவு செய்துவிட்டார். அதிமுகவில் இணைவதற்கு எந்த நிபந்தனையும் ஓபிஎஸ் வைக்கவில்லை. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அவரை ஏற்க தயாராக இல்லை என்று கூறிவிட்டார்.

இதனால் ஓபிஎஸ்க்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்து சில தொகுதிகளில் போட்டியிடுவது, தவெகவில் இணைவது அல்லது பாஜகவில் இணைந்து பொறுப்பில் இருப்பது ஆகிய வாய்ப்புகளே உள்ளன. தை மாதத்தில் முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில், தை மாதம் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் என்ன முடிவு என்று அறிவிக்கவில்லை.
அதிகமாக நம்பியிருந்த பாஜக தலைமையில் கைவிட்டதால், தேனி மாவட்டத்திலேயே ஓபிஎஸ் முகாமிட்டிருக்கிறார். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் இருந்த ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துவிட்டனர். இதனால் ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. நன்றாக உழைக்கிறார். மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் சொல்ல வந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார்.
கமல்ஹாசன் எம்பியாக இருப்பதால், அவர் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை. அடுத்த முறை பேசுவதற்கு வாய்ப்பு வரும்போது திருத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அதேபோல் தவெக தலைவர் விஜய் அவரது கட்சி மற்றும் கொள்கைகளை மக்கள் முன் வைக்கட்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கொள்கையை நாங்களும் மக்கள் முன் வைக்கிறோம். இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்.
அரசியலில் நாகரீகம் என்று உள்ளது. லட்சுமண ரேகையை கடக்கக் கூடாது என்றுதான் விஜய் தரப்புக்கு சொல்கிறேன். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை. அவர் எங்களோடு தான் இருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ்ஸை என்டிஏ-வில் இணைக்க முயற்சிகள் நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications