மதுரை அதிமுக மாநாடுக்கு சிறப்பு ரயில்! சென்னை சுற்றுவட்டார மாவட்ட தொண்டர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு
மதுரை: மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர் அக்கட்சியின் சென்னை மற்றுன் அதன் சுற்றுவட்டார மாவட்டச் செயலாளர்கள்.
இதற்கான தொகையை முன்கூட்டியே கட்டியுள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை சிறப்பு ரயில் மூலம் மதுரையில் நடைபெறும் மாநாடுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்கள். நீண்ட தூரப் பயணம் என்பதாலும் தனித்தனியாக வேன், பேருந்து என வாடகைக்குப் பிடித்தால் கூடுதல் செலவாகும் என்பதாலும் இந்த சிறப்பு ரயில் திட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் பேச வேண்டிய ஆட்கள் மூலம் பேசி இந்த ஏற்பாட்டை அதிமுக தலைமை செய்து கொடுத்திருக்கிறது. அதேபோல் ஆகஸ்ட் 19,20 ஆகிய இரண்டு நாட்களும் மதுரையில் உள்ள அனைத்து முக்கிய திருமண மண்டபங்களையும் இப்போதே முன் பதிவு செய்து வைத்துள்ளது அதிமுக. அதேபோல் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்கு விடுதிகளும் முன் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒரு சிறப்பு ரயில் போதாது எனக் கருதும் அதிமுக, கூடுதலாக இன்னொரு சிறப்பு ரயிலை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்ட அதிமுக தொண்டர்களையும் அலைச்சலின்றி மதுரை அழைத்து வர முடியும் எனக் கருதப்படுகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கட்டணமின்றி உணவு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்சித் தொண்டர்களுக்கு வயிராற சாப்பாடு போடும் பொறுப்பை மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications