பிரதமரின் நலம் நாடி! மதுரையில் பாஜக நடத்திய மிருத்தியுஞ்சிய ஹோமம்! அண்ணாமலை பங்கேற்பு!
மதுரை: பிரதமர் மோடியின் ஆரோக்கியத்துக்காக தமிழக பாஜக சார்பில் மதுரையில் மிருத்தியுஞ்சிய ஹோமம் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த சிறப்பு ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மிருத்தியுஞ்சிய ஹோமத்தை மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், தனது முன்னாள் தொகுதியான திருப்பரங்குன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நிகழ்வு
பஞ்சாப் மாநிலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு சென்றுவிட்டு பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற பிரதமர் மோடியை, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் மறித்தனர். இதனால் மேம்பாலத்தில் 15 நிமிடங்கள் வரை பிரதமரின் கார் காக்க வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரும் பிழையாக பார்க்கப்படுகிறது.

மோடியின் நலம்
இதனிடையே தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பதிண்டா விமான நிலையம் திரும்பிய பிரதமர் மோடி, ''நான் உயிருடன் விமான நிலையம் திரும்பியதற்கு உங்கள் முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்'' எனக் கூறிவிட்டு கோபத்துடன் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் பிரதமர் மோடியின் ஆரோக்கியத்துக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சிறப்பு வழிபாடுகள் நடத்த தொடங்கினர்.

மிருத்தியுஞ்சிய ஹோமம்
அந்த வகையில் தமிழக பாஜக சார்பில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், மிருத்தியுஞ்சிய ஹோமம் நடத்தப்பட்டது. இந்த ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த டாக்டர் சரவணனுக்கு டெல்லி மேலிடத்தில் இருந்து பாராட்டும் கிடைத்திருக்கிறது.

எதற்காக ஹோமம்
மிருத்தியுஞ்சிய ஹோமம் செய்யப்படுவதன் மூலம் நீண்ட ஆயுட்காலத்தையும், ஆரோக்கியத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை. இது யாருக்காக நடத்தப்படுகிறதோ அவருக்கு மட்டுமல்லாமல் அந்த ஹோமத்தில் பங்கு பெறுபவர்களுக்கும் அதன் நன்மைகள் சென்று சேரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இந்த ஹோமத்தில், ஒட்டுமொத்த தென்மாவட்ட நிர்வாகிகளும் ஆஜராகியிருந்தனர்.












Click it and Unblock the Notifications