அதிமுகவை பயமுறுத்தி... பாஜக தன்னை பலப்படுத்த பார்க்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
மதுரை: அதிமுகவை பயமுறுத்தி, பாஜக தன்னை பலப்படுத்தப் பார்க்கிறது என்ற குற்றஞ்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுகவுக்கு பாடம் புகட்டும் தேர்தல் இது என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "இது இந்திய கம்யூனிஸ்ட் மாநாடாக இருந்தாலும் திமுக மாநாட்டில் கலந்துகொள்வது போன்றே அதே உணர்வோடு உள்ளேன். நாம் ஒரே கொள்கையோடு உள்ளவர்கள் என்ற பாசத்தால் இங்கே ஒன்றிணைந்துள்ளோம். திராவிட கட்சி இல்லையெனில் கம்யூனிச கட்சியில் ஏற்றுக் கொண்டிருப்பேன் என கருணாநிதி கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்
வரும் தேர்தல் லட்சியத்திற்கான தேர்தல், ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல், கொள்ளை கூட்டத்தில் இருக்கும் ஆட்சியைப் பறித்து கொள்கை உடையோரிடம் ஒப்படைக்கும் தேர்தல். அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்றி நினைக்கிறது பாஜக. தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

ஊழல் கரங்கள்
பிரதமர் மோடி, முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கையை உயர்த்தியுள்ளார். ஊழல் கரங்களை உயர்த்தி, ஊழலுக்கு உதவி செய்வதை வெளிப்படுத்தியுள்ளார். மோடியின் ஒரு கரம் காவி, மறு கரம் கார்ப்பேரட் கரம். அதோடு ஊழலையும் கரம் கோர்த்துள்ளார்.

பொருளாதார தாக்குதல்
பிரதமர் மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துகிறது, பெட்ரோல், டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வுதான் மோடி அரசு, தொடர்ந்து மக்களுக்கு தரும் பரிசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல் விலை உயர்கிறது. பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி, போக்குவரத்து கட்டணம் என அனைத்து பொருட்களின் விலைவாசி உயரும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்துக் கூட தட்டி கேட்கமுடியாத அரசாக உள்ளது, மாநில உரிமைகளை தாரை வார்த்துவிட்டனர் தாரை வார்க்கும் அரசாக உள்ளது.

மதுரை எய்மஸ்
மதுரையில் எய்ம்ஸ் மோடி அரசு மனசு வைத்தால் வரும் என்ற நிலை மாறி, இப்போது ஜப்பான் நிதி கொடுத்தால் தான் வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தரவில்லை. எடப்பாடி அரசை ஒரு அரசாகவே மத்திய அரசு மதிக்கவில்லை. வரும் தேர்தல் நிகழ்காலத்திற்கு அல்ல, எதிர்காலத்திற்கான முக்கிய தேர்தல். அதிமுகவை பயன்படுத்தி காலுன்ற பார்க்கிறது. பெரியார், அண்ணா போன்ற உன்னத தலைவர்களால் உரம் போட்டு உருவாக்கப்பட்ட தமிழகத்தில் இழந்த உரிமையை மீட்க பாடுபட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications