மாமியார் மதிக்கவில்லை என மனைவியிடம் டைவர்ஸ் கேட்பதா? ஹைகோர்ட் நீதிபதிகள் ஆச்சரியம்! அதிரடி ஆர்டர்
மதுரை: மாமியார் மதிக்கவில்லை என்ற காரணத்தையும் காட்டி மனைவியிடம் விவகாரத்து கேட்டு இருப்பது தங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுப்பதாக மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை காரணம் காட்டி குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், தனது மாமியார் தனது பேச்சை மதிக்கவில்லை எனக் கூறி அதையும் மனைவியிடம் விவகாரத்து கோரும் மனுவில் ஒரு காரணமாக கூறியிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளார். இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

மதுரையை சேர்ந்தவர் கதிர். இவரது மனைவி லேகா (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) தனது சொந்த அத்தை (அப்பாவின் தங்கை) மகளையே கதிர் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் லேகாவிடம் விவாகரத்து கேட்டு கதிர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விஷம் குடித்துவிட்டார்: ஆனால், விவாகாரத்துக்கு கதிர் கூறும் காரணம் ஏற்கும்படியாக இல்லை எனக் கூறி மனுவை நிராகரித்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரை ஹைகோர்ட் கிளையில், கதிர் அப்பீல் செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு: -
மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்தது. இதை நேரில் பார்த்ததால், மனைவி விஷம் குடித்து விட்டார். மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றினேன். இதனால், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறேன். இது மனரீதியாக செய்யும் கொடுமை ஆகும். அதனால் விவாகரத்து வேண்டும் என்று கதிர் மனுவில் கூறியுள்ளார்.
கள்ளத்தொடர்பு: ஆனால், கதிர் மீது அவரது பெரியப்பா கொடுத்த புகார் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் போது ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக கூறியுள்ளார். அதே வேளையில், மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக சொல்லப்பட்ட நபரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. அது மட்டும் இன்றி தற்கொலைக்கு முயன்ற மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ ஆவணங்கள், தற்கொலைக்கு முயன்ற குற்றத்துக்காக காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் கதிர் தாக்கல் செய்யவில்லை.
சரியாக தான் நிராகரித்திருக்கிறது: குடும்ப பிரச்சினை தொடர்பாக கதிரின் பெரியப்பா காவல்துறையில் புகார் செய்துள்ளார். அதனால், கடந்த 2018-ம் ஆண்டு தான் லேகாவை கதிர் பிரிந்துள்ளார். ஆனால், 2014-ம் ஆண்டே பிரிந்ததாக கூறி 2019-ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கதிர் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே தான் குடும்ப நல நீதிமன்றம் மனுவை சரியாக நிராகரித்துள்ளது.
லேகாவின் சகோதரர் திருமண அழைப்பிதழிலில் கதிரின் அண்ணன் குடும்பத்தினர் பெயர் இல்லை. இதனால், கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதேபோல கதிரின் அண்ணன் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சியின் கதிர் மற்றும் மனைவி லேகாவின் பெயர் இல்லை. இதிலும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
மாமியார் மதிக்கவில்லை: இந்த வழக்கில் இறுதியாக சொன்ன காரணம்தான் முக்கியமானது. தனது மாமியார் (லேகாவின் தாயார்) இன் தந்தை இறந்துவிட்டார். ஆனால், தனது பெரியப்பாவுடன் உள்ள பகை காரணமாக தாத்தாவின் அதாவது தனது மாமியார் அவரது தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க கூடாது என்று கதிர் கூறியுள்ளார். ஆனால், இதை கேட்காமல் தனது தந்தை இறுதிச்சடங்கில் மாமியார் பங்கேற்று விட்டார். இதையும் ஒரு காரணமாக விவகாரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆச்சர்யம் அளிக்கிறது: மாமியார் மதிக்கவில்லை என்பதற்காக மனைவியிடம் கதிர் விவாகரத்து கேட்பது ஆச்சர்யம் அளிக்கிறது. குடும்பத்தில் இதுபோல நடக்கும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. இதை சரியாக பரிசீலித்தே கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications