மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவரை நியமித்தது மத்திய அரசு.. யார் இந்த நாகராஜன் வெங்கட்ராமன்?
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டிருக்கும் நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் இல்லை என சமீபத்தில் பதில் அளித்திருந்தது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவரை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் தலைவர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர். பின்னர் மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்காக தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

எய்ம்ஸ் சர்ச்சை
இதையடுத்து, 1,264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், அதன்பிறகு எய்ம்ஸ் பணிகளில் வேகமில்லை. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 2019 ஜனவரி மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகும் பணிகள் முடங்கின. தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா, மதுரை எய்ம்ஸ் 95% கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நட்டா சர்ச்சை
தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஆர்டிஐ சட்டத்தின் கீழ், மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் எனக் கேட்கப்பட்டதற்கு சுகாதார அமைச்சகம் எப்போது தொடங்கும் என்ற தகவல் இல்லை என்றும் கட்டுமான பணிகள் 2026ல் முடிவடையும் என்றும் பதில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைவர் நியமனம்
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரையில் உள்ள வி.என் நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமித்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications