தமிழ் தெரியாதவர்கள் அரசு பணியை இழக்க வேண்டுமா? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் புதிய உத்தரவு
மதுரை: மின்வாரிய பணியில் சேர்ந்த இரு ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத ஊழியரை மீண்டும் வேலையில் சேர்க்க அனுமதித்ததற்கு தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, தமிழ் தெரியாவிட்டால் அரசு வேலையை இழக்கணுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் மின்வாரியத்தில் இளநிலை உதவியாளராக 2018ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்கவில்லை என எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் தேர்வில் இரு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மின்வாரிய பணியின் விதிமுறையாகும். ஆனால் ஜெய்குமாரால் குறிப்பிட்ட அந்த இரு ஆண்டுகளுக்குள் அவரால் அந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
அதனால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தன்னை பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரரின் பெற்றோர் தமிழர்கள்தான். அவரது தந்தை கடல் படை அதிகாரியாக இருந்தார். அவர் பல்வேறு மாநிலங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்தார்.
இதனால் மனுதாரர் ஒரே பள்ளியில் படிக்க முடியாமல் ஊர் ஊராக சென்று படிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில்தான் அவர் இந்தியை இரண்டாவது மொழியாக படித்தார். சம்பந்தப்பட்ட நபருக்கு தமிழில் போதிய அறிவு இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.
தேனி மாவட்டம் போடியில் பிறந்த மனுதாரர் மின்வாரியத்தில் பணிபுரிந்த போது தமிழில் போதிய அறிவை பெற்றிருந்தார். இந்த மண்ணின் பக்கா தமிழனான மனுதாரரை பணியிலிருந்து தூக்கி எறிவது சரியல்ல. மனுதாரர் 2022ஆம் ஆண்டு ஜூனில் நடந்த தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனவே அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக மின்வாரிய தலைவர், தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவானது நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர்கள் தங்கள் உத்தரவில், தமிழகத்தில் தமிழில் புலமை இல்லாமல் ஒருவர் அரசு பணியில் நியமனம் செய்வது தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே தமிழில் போதிய அறிவு இல்லாவிட்டால் அரசு பணியை இழக்க நேரிடுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்து தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications