ராஜேந்திர பாலாஜிக்காக ஆஜரானதால் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்துவதா?.. ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி
மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக ஆஜரானதால் மதுரை வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் சோதனை நடத்துவதா என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள். சென்னை, கேரளா, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பதுங்கியிருக்கிறாரா என சோதனை நடைபெற்று வருகிறது.

இருவர் உதவி
ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக இருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என்பதால் டெல்லிக்கும் தனிப்படை விரைந்துள்ளது. எனினும் அவரை கைது செய்ய முடியவில்லை. இதனிடையே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மதுரை வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் உரிய வாரண்ட் இல்லாமல் போலீஸார் சோதனை நடத்தியதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவல் ஆய்வாளர் ஆஜராக உத்தரவு
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக சோழவரம் காவல் ஆய்வாளர் சிவபாலனிடம் விசாரணை நடத்த உடனே ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதன் பேரில் அவர் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரணைக்கு ஆஜரானார். அப்போது நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் வீட்டில் சோதனை ஏன்
"எந்த அடிப்படையில் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தினீர்கள்? அவ்வாறு சோதனை நடத்த மாஜிஸ்திரேட்டிடம் உரிய உத்தரவு பெற்றீர்களா?"என நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார். அப்போது சிவபாலன், மாஜிஸ்திரேட் உத்தரவை பெறவில்லை. ஆனால் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரிலேயே ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் சோதனை நடத்தினேன் என ஆய்வாளர் சிவபாலன் தெரிவித்தார்.

எஸ் பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
சட்டப்படியான அனுமதி ஏதுமில்லாமல் வழக்கறிஞர் வீட்டில் போலீசார் சோதனை நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் உடனடியாக மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜனவரி 7) ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications