அம்மனுக்கு சாற்றிய மாலையை இஸ்லாமியருக்கு அணிவித்த சிவாச்சாரியார்! சித்திரை திருவிழாவில் நெகிழ்ச்சி
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா நான்காவது நாளாக இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் அம்மன் வீதி உலா வந்தபோது, அம்மனுக்கு சாற்றப்பட்டிருந்த மாலையை, பக்தர்களுக்கு உதவிய இஸ்லாமியருக்கு அணிவித்து சிவாச்சாரியார் கௌரவித்துள்ளார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு நீர், மோர் கொடுத்து உதவிய இஸ்லாமியர் கௌரவிக்கப்பட்டது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

ஆண்டு தோறும் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் 6ம் தேதி பட்டாபிஷேகமும், 7ம் தேதி திக் விஜயம், 8ம் தேதி திருக்கல்யாணம், 9ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று அம்மன் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் மசூதி அருகே வரும்போது, சுவாமியுடன் வந்த சிவாச்சாரியார் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மசூதிக்கு வெளியில் இஸ்லாமியர்கள், இந்து பக்தர்களுக்காக நீர் மோர் பந்தலை அமைத்திருந்தனர். பக்தர்களுக்கு ரோஸ்மில்க் உள்ளிட்டவற்றையும் வழங்கி வந்தனர். இந்த உதவியை பாராட்டி அம்மனுக்கு சாற்றப்பட்டிருந்த மாலையை அந்த இஸ்லாமியர்களுக்கு சிவாச்சாரியார் அணிவித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
மதுரையில் சமீப காலமாக நடந்த சம்பவங்கள் விவாதமாகியிருந்தது. குறிப்பாக திருப்பரங்குன்றம் கோயில் விஷயத்தில் வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. இந்த மலையின் அடிவாரத்தில் முருகன் கோயிலும், மலைக்கு மேலே வெயிலுகந்த அம்மன் கோயிலும், மற்றொரு பகுதியில் சிக்கந்தர் பாட்ஷாவின் மசூதியும் அமைந்திருக்கிறது. தவிர சில இடங்களில் சமண சிற்பங்களும் அமைந்திருக்கின்றன.
இங்குள்ள மசூதியில் பலியிட்டு, பக்தர்களுக்கு படையல் போட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. ஆனால் இந்துத்துவா அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. திருப்பரக்குன்றம் மலை இந்துகளுக்கே சொந்தம் என்றும், இஸ்லாமியர்கள் உயிர்பலி இடக்கூடாது என்றும் வாதிட்டனர். இது பெரும் விவாதமாக மாறியது. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.
இப்படி இருக்கையில், சித்திரைத் திருவிழாவில் இன்று நடந்த சம்பவம் மத நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிப்பதாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அனைத்து மதத்தினரும் இதேபோல ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications